2வது திருமணம்.. யெஸ், அந்தப் போட்டோ உண்மை தான்.. 4 மாதங்களுக்குப் பின் மனம் திறக்கும் மதுரை முத்து!
காமெடி பேச்சாளர் மதுரை முத்து தனக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது உண்மை தான் என ஒப்புக் கொண்டுள்ளார்.
மதுரை: மறைந்த தனது மனைவி வையம்மாளின் தோழியான பல் மருத்துவர் நீத்துவை தான் இரண்டாவதாக திருமணம் கொண்டுள்ளதாக மதுரை முத்து தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த காமெடி பேச்சாளர், நடிகர் முத்து. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான இவர், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவி வையம்மாள் (32). இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை முத்து வெளிநாடு சென்றபோது, கார் விபத்தில் வையம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து தன் மனைவியின் நினைவாகவே இருந்த முத்து, தன் பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி அவரின் புகைப்படங்களைப் பதிவு செய்து வந்தார்.
2வது திருமணம்...
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை முத்துவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற்று விட்டதாகவும், அவர் வேறொரு பெண்ணுடன் திருமண கோலத்தில் இருப்பது போன்றவும் புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்தன. ஆனால், அது உண்மையில்லை எனவும், குறும்படத்திற்காக எடுக்கப்பட்ட ஒன்று எனவும் மதுரை முத்து விளக்கமளித்தார்.
உண்மை தான்...
இந்நிலையில், தற்போது வார இதழுக்கு ஒன்று மதுரை முத்து அளித்துள்ள பேட்டியில், ‘தனக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது உண்மை தான்' என உண்மையைப் போட்டுடைத்துள்ளார்.
குழந்தைகளுக்காக...
இது தொடர்பாக மேலும் அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, "வயதான எனது தாய், தந்தை மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக நான் அடுத்த திருமணம் பற்றி முடிவெடுக்க வேண்டியதாயிற்று. அப்படி திருமணம் செய்த பெண்தான் நீத்தி. அவர் என்னுடைய மனைவியின் நெருங்கிய தோழி.
பல் மருத்துவர்...
மதுரையில் பல் மருத்துவராக உள்ளார். சிறு வயதில் அவரின் தந்தை குடும்பத்தை விட்டு சென்றதால், தாய் இல்லாத என் குழந்தைகளின் ஏக்கத்தை அவர் புரிந்து கொண்டு என்னை திருமணம் செய்ய சம்மதித்தார். என் இரு குழந்தைகளுக்கும் அவரை மிகவும் பிடிக்கும்
பேஸ்புக் போட்டோ...
அவரை திருமணம் செய்த போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தேன். ஆனால், ஏராளமனோர் என்னை தவறாக எடுத்துக் கொண்டதால் அதை நீக்கி விட்டேன்" என மதுரை முத்து தெரிவித்துள்ளார்.