மகா சிவராத்திரியும் குமரி மாவட்ட சிவாலய ஒட்டமும்
குமரி மாவட்டத்தில் சிவபக்தர்கள் மகாசிவராத்திரியன்று விரதம் கடைப்பிடித்து பன்னிரண்டு சிவன் கோவில்களுக்குச் செல்வார்கள். இதனை சிவாலய ஓட்டம் என்று கூறுகின்றனர்.
சென்னை: மகாசிவராத்திரி நாளில் சிவ ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெறும். அதே நேரத்தில் குமரி மாவட்டத்தில் பக்தர்கள் கோவிந்தா... கோபாலா என்று திருநாமத்தை கூறிக்கொண்டே ஓடி வருவார்கள். சிவ ஆலயங்களில் சென்று தரிசிப்பார்கள். இது சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.
இந்த சிவாலய ஓட்டத்தில் பங்குபெறுபவர்கள் மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். சிவராத்திரிக்கு முதல் நாள் அதாவது இன்று வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் தொடங்குகிறது.
காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு வழியில் ஏற்படக்கூடிய செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் எடுத்துக்கொள்வர். முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கிவிட்டு ஓட ஆரம்பிப்பர். இப்போதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை ''கோவிந்தா, கோபாலா'' என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள்.
12 சிவ ஆலயங்கள்
திருமலை மகாதேவர் கோவிலிலிருந்து புறப்பட்டு, திருமலை, திற்குறிச்சி, திற்பரம்பு, திருநந்திக்கரை, பொன்மலை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக் கோடு, திருநட்டாலம் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங் களுக்கு நடையும் ஓட்டமுமாகச் செல்வார்கள். இவர்கள் அன்றிரவு சுமார் 70 கிலோமீட்டர் தூரம் ஓடுவார்கள் . அவ்வாறு ஓடும் போது "கோவிந்தா கோவிந்தா' என்று குரல் கொடுத்த வண்ணம் ஓடுவர் .
சிவாலய ஓட்டம் தோன்றிய கதை
இந்த சிவாலய ஓட்டம் ஏன் தோன்றியது என்பதே ஒரு சுவாரஸ்யமான கதை. புருடாமிருகம் பாதி மனித உருவம், மீதி புலி உருவமாக அமைந்த ஒரு பிறவி. ஆழ்ந்த சிவபக்தர். சிவனைத் தவிர, வேறு இறைவனை ஏற்கமாட்டார்.
விஷ்ணு நாமம், இவருக்குக் கேட்க சகிக்காது! ஆனால் தானும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை அவருக்கு உணர்த்த விரும்பினார் பகவான் கிருஷ்ணன். அவர் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனை அழைத்தார். நடைபெறவிருக்கும் குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், அந்த புருடா மிருகத்தின் உதவியும் தேவைப்படுகிறது. ஆகவே, அதனை சந்தித்து அதன் உதவியைக் கோரி வருமாறு அவர் பீமனை அனுப்பி வைத்தார். கூடவே, அவனிடம் 12 ருத்ராட்சங்களைத் தந்து, தன்னுடைய கோவிந்தா, கோபாலா என்ற பெயர்களை உச்சரித்தவாறே புருடா மிருகத்தை நெருங்குமாறும் சொன்னார்.
சிவலிங்கம்
என் பெயரைக் கேட்க விரும்பாத புருடா மிருகம், உன் மீது பாயும். நீ உடனே ஒரு ருத்ராட்சத்தை அந்த இடத்தில் போட்டுவிடு. அது ஒரு சிவலிங்கமாக மாறிவிடும். அதனைக் காணும் புருடா மிருகம், அந்த லிங்கத்துக்கு உரிய வழிபாட்டினை செய்த பிறகுதான் மறுவேலை பார்க்கும். அங்கிருந்து நீ ஓடிவிடு. பிறகு அது உன் னைத் துரத்தி வரும். அடுத்த இடத்தில் இன்னொரு ருத்திராட்சத்தைப் போடு. இதுவும் லிங்கமாக மாறும். புருடா மிருகமும் பூஜை செய்யத் தொடங்கி விடும்.
12 சிவலிங்கம்
இப்படி பன்னிரண்டு இடங்களுக்கு ஓடி, ஓடி அதனை அலைக்கழித்தால் பன்னிரண்டாவது ருத்திராட்சம் விழும் இடத்தில் நான், பரமேஸ்வரனுடன் உங்கள் இருவருக்கும் காட்சி தருவேன் என்று விளக்கி, பீமன் நடந்துகொள்ள வேண்டிய முறையைச் சொன்னார். பீமனும் அவ்வாறே செய்தான். அப்படி முதல் ருத்திராட்சம் விழுந்த இடம்தான் திருமலை. பன்னிரண்டாவது விழுந்த இடம் நட்டாலம்.
கர்ணபரம்பரை கதை
நட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து, சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று புருடா மிருகத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே உணர்த்தினார். புருடா மிருகத்தின் உதவியும் குருக்ஷேத்திர யுத்தத்திற்குக் கிடைத்தது. இப்படி கர்ண பரம்பரையாகச் சொல்லப்படும் கதையை ஒவ்வொரு மகாசிவராத்திரி அன்றும் ஒரு குழுவினர் பீமனுடைய பிரதிநிதியாக ஓடி, ஓடிச் சென்று அந்த சிவாலயங்களைத் தொழுகிறார்கள்.