இன்று மகாளய அமாவாசை- முன்னோர்களுக்கு திதி கொடுத்து லட்சக்கணக்கானோர் வழிபாடு
மகாளய அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஏராளமானோர் வழிபட்டனர்.
சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட புண்ணிய தலங்களில் உள்ள கடல்கள், ஆறு, குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து மக்கள் வழிபாடு நடத்தினர்.
சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் நமது முன்னோர்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.
ஆவணி மாதம் பவுர்ணமி முடிந்து பிரதமை முதல் அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.
மகாளய அமாவாசை
மகாளய பட்சத்தில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வது சிறப்பாகும். இன்று மகாளய அமாவாசை என்பதால் சென்னை மெரினா கடற்கரை, மயிலை கபாலீஸ்வரர் கோயில் குளம் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் ஏராளமானோர் திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.
கடலில் புனித நீராடிய மக்கள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், திருச்செந்தூர் கடல், பவானி கூடுதுறை, திருச்சி காவிரி ஆறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருவையாறு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடி திதி கொடுத்தனர்.
காவிரிக்கரையில் வழிபாடு
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரியாற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையில் இருந்தே காவிரியாற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
மகாளய அமாவாசை நாள். முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும். எள் தானம் கோடி புண்ணியத்தை தரும் என்கிறது சாஸ்திரம்.
தானம் செய்யுங்கள்
மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவினால் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.
பசுவிற்கு அகத்திக்கீரை
வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும் முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளிக்க வேண்டும் என்பது ஐதீகம். இதனையடுத்து அகத்திக்கீரையை வாங்கிய பலரும் பசுவிற்கு தானம் அளித்தனர்.