மதுரையில் யானை மீது அமர்ந்து சென்ற பாகன் மின்சாரம் தாக்கி பலி
திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி அருகே யானை மீது அமர்ந்து சென்ற பாகன் மின்சாரம் தாக்கி பலியாகினார்.
மதுரை: திருப்பரங்குன்றம் அருகே யானை மீது அமர்ந்து சென்ற பாகன் மீது மின்சார வயர் உரசியதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (24). இவர் தல்லாகுளத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் வளர்க்கும் யானையின் பாகனாக 10 ஆண்டுகளாக இருந்தார். 10 நாட்களுக்குமுன்பு தான் இவருக்கு காதல் திருமணம் நடந்தது.
இந்நிலையில், நேற்று இரவு 7:30 மணிக்கு திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி பகுதியில் யானையின் மேல் அமர்ந்து கொண்டு, அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் வசூல் செய்துள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக மின் வயர் மீது அவரது உடல் உரசியது. இதனால் அவர் மீதும், யானையின் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதையடுத்து யானையின் மீது உட்கார்ந்திருந்த பாகன் ஞானசேகரன் தூக்கி வீசப்பட்டார். யானை தரையில் விழுந்தது. பின்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். தரையில் விழுந்த யானை திடீரென எழுந்து ஓடி தறிகெட்டு ஓடியது. பின்னர் திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறம் மரங்கள் இருந்த இடத்தில் நின்றது. துணை பாகன்கள் யானையை மரத்தில் கட்டிப்போட்டனர். இதுகுறித்து திருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.