சிவகாசி பட்டாசு ஆலை குடோனில் வெடி விபத்து - கட்டிடம் தரைமட்டம்
சிவகாசி: சிவகாசி அருகே ஆனைக்குட்டம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்களும், பட்டாசுகளும் வெடித்து சிதறியதில் கட்டிடம் தரை மட்டமானது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது தெற்கு ஆனைக்குட்டம். இங்கு தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் சுமார் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இன்று காலை அவர்கள் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர்.
பட்டாசு ஆலை அருகில் குடோன் ஒன்று உள்ளது. அதில் பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் குவிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 11 மணியளவில் மூலப் பொருட்களில் உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறை முழுவதும் தீ மளமளவென பரவியது.
அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்களும், பட்டாசுகளும் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை கிளம்பியது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சிவகாசியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 3 வண்டிகளில் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த குடோனில் இருந்த மூலப்பொருட்கள் வெடித்து கொண்டே இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.
இதற்கிடையில் இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அருகில் உள்ள கிராமங்களான விசுவநத்தம், சித்துராஜபுரம், வெற்றிலையூரணி ஆகிய பகுதிகளிலிருந்து ஆண் களும், பெண்களும் திரண்டு வந்தனர்.
தாசில்தார் பாஸ்கரன், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராமராஜ் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களை பட்டாசு ஆலை அருகில் செல்லவிடாமல் தடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். மூலப்பொருட்கள் இருந்த குடோன் தரை மட்டமானது. இந்த தீ விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.