மக்கள் நலக் கூட்டியக்கம் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது... ஏர்போர்ட்டில் இருந்து தமிழிசை
சென்னை: தேர்தல் நேரத்தில் மக்கள்நலக் கூட்டியக்கத்தில் யார், யார் இருப்பார்கள் என்பதை கூற முடியாது, அந்த கூட்டியக்கம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மக்கள்நலக் கூட்டியக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன் ஒருங்கிணைப்பாளராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத ஆட்சி மாற்றத்தினை மக்கள் நல கூட்டியக்கம் ஏற்படுத்தும் என வைகோ கூறிவருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டியக்கம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாது என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜக பெரும் சக்தியாக செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு மக்கள் நலத் திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை, மக்கள்நலக் கூட்டியக்கம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாது, தேர்தல் நேரத்தில் கூட்டியக்கத்தில் யார், யார் இருப்பார்கள் என்பதை கூற முடியாது.
மனிதநேய மக்கள் கட்சியைக் காப்பாற்றும் பணியில் ஜவாஹிருல்லா ஈடுபட வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.