அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு பார்சலில் வந்த துப்பாக்கி விவகாரம்... கோவை இளைஞர் கைது
சென்னை: அமெரிக்காவில் இருந்து ஆன்லைன் மூலமாக கைத்துப்பாக்கி வாங்கிய கோவை வாலிபர் சென்னை விமான நிறுவன பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையால் சிக்கினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவில் இருந்து கோவை வடவள்ளியில் உள்ள சூரியதேவன் என்பவருக்கு துரித பார்சலில் விளையாட்டு பொருட்கள் கொண்ட ஒரு பொட்டலம் சென்னை தபால்துறைக்கு கடந்த 21 ஆம் தேதி வந்தது.
இந்த பொட்டலத்தை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அனுப்புவதற்காக தனியார் விமான நிறுவனத்தின் பார்சல் பிரிவு உள்ள ஆலந்தூருக்கு தபால் துறை சார்பில் கொண்டு வரப்பட்டது.
அந்த பொட்டலத்தை விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேனிங் செய்து பார்த்தனர். அப்போது அதில் விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக துப்பாக்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.
விமானத்தில் துப்பாக்கியை அனுப்ப முடியாது என்றனர். உடனே தபால் துறையினர் தபாலில் இருந்த முகவரியில் உள்ள சூரியதேவனிடம் விசாரித்தபோது அது துப்பாக்கி வடிவில் இருக்கும் விளையாட்டு பொருள் என கூறியதாக தெரிகிறது.
இருப்பினும் சந்தேகம் கொண்ட தபால் துறையினர் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தந்தனர். சென்னை விமான நிலைய போலீஸார் துப்பாக்கியை கைப்பற்றி அது உண்மையிலேயே துப்பாக்கி தானா, இல்லை விளையாட்டு பொருளா என்பதை கண்டறிய மைலாப்பூரில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ஆய்வின் முடிவில் அது 9 எம்.எம் அளவு கொண்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்படும் கைத்துப்பாக்கி என்பது தெரியவந்தது. மேலும், அமெரிக்காவில் இருந்து துப்பாக்கி பார்சலில் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியதேவனை கைது செய்தனர். விசாரணையில் அவர் டிப்ளமோ படித்து முடித்து விட்டு தந்தையுடன் தங்கநகை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் ஆன்லைனில் ரூபாய் 10 ஆயிரத்திற்கு அந்த துப்பாக்கியை கடந்த 45 நாட்களுக்கு முன்பு வாங்கி உள்ளார். இதையடுத்து இந்த துப்பாக்கி தபாலில் அனுப்பப்பட்டு உள்ளது என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சூரியதேவனை ஆலந்தூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க நீதிபதி வித்யா உத்தரவிட்டார். இதனையடுத்து சூரியதேவன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.