டாஸ்மாக்கில் போலி மதுபானம்.. நெல்லையில் ஒருவர் சாவு, சேர்ந்து குடித்த நண்பர் உயிர் ஊசல்!
நெல்லை: டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்ட, போலி மதுகுடித்து ஒருவர் பலியாகி இன்னொருவர் உயிர் ஊசலாடும் சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.
திருநெல்வேலி, அருகேயுள்ள முக்கூடலில் உள்ள டாஸ்மாக்கில், நேற்று இரவு மது வாங்கி குடித்த, அரியநாயகிபுரத்தை சேர்ந்த பரமசிவன் என்பவர் மகன் சண்முகம் (40), ஊருக்கு ஒதுக்குப்புறமாக இறந்துகிடந்தார்.
அவருடன் சேர்ந்து, மதுக்குடித்த ராமகிருஷ்ணன் (50) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலி மதுபானம் குடித்ததால் இருவருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. எனவே, போலீசார் விசாரணை நடத்தி, இன்று காலையில் பள்ளக்கால்பொதுக்குடியை சேர்ந்த கோபால் (81), என்பவரை போலி மதுபானம் விற்றதாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 99 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் போலியான மதுபானங்களை சப்ளை தொடர்ந்து நடக்கிறது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் பெயர்களில், அதே பாட்டில்களில் ஸ்பிரிட் அளவு அதிகமாக கலந்து போலி மதுபானம் சப்ளை செய்யப்படுகிறது. அண்மையில் புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் இருந்து ஒரு வேன் நிறைய பாட்டில்களை சப்ளை செய்த கும்பலை போலீசார் கைதுசெய்தனர். பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.