வெஸ்ட் கோஸ்ட் ரயில் பாத்ரூமில் தீக்குளித்த பயணி- காட்பாடி அருகே பரபரப்பு!
வேலூர்: வேலூர் அருகே ஓடும் ரயிலில் பயணி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் ரயில் இன்று மதியம் 2.30 மணியளவில் காட்பாடி அருகே சேவூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்த கழிவறையில் இருந்து புகை வந்திருக்கிறது. இதைப் பார்த்த பயணிகள் கூச்சலிட்டிருக்கின்றனர்.
இதையடுத்து, காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த ரயில் காட்பாடி வந்ததும் போலீசார் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஒருவர் தீக்குளித்த நிலையில் இறந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது உடலை மீட்டு ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, தீக்குளித்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவரது உறவினர்கள் யாராவது அந்த ரயில் அவருடன் வந்திருக்கிறார்களா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயணியின் உடலில் பற்றிய தீ ரயிலின் எஸ் 11வது பெட்டிக்கு பரவி அந்த பெட்டியும் லேசாக எரிந்துள்ளது. ரயிலில் பயணி ஒருவர் தீக்குளித்த சம்பவத்தையடுத்து, வெஸ்ட் கோஸ்ட் ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.