போதையில் மனைவிக்கு அடி - மயங்கிய மனைவி இறந்துவிட்டதாக நினைத்து ஈ.பி ஊழியர் தற்கொலை
சேலம்: சேலத்தில் குடிபோதையில் மனைவியை அடித்த மின்வாரிய ஊழியர் மயங்கி விழுந்த மனைவி இறந்துவிட்டதாக நினைத்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், மகுடன்சாவடி அருகிலுள்ள இடங்கணசாலை பேரூராட்சி கே.கே.நகர், மட்டக்காரர் தெருவில் வசித்து வந்தவர் முருகேசன். இவர் இடங்கணசாலை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு லோகேஸ்வரன் என்ற மகனும், ஸ்ரீ அனீஷ் என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகேசன் குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டில் சாப்பிட்ட அவர், ரேஷன் அரிசியில் ஏன் சமையல் செய்தாய், கடையில் அரிசி வாங்கி சாதம் வைக்க வேண்டியது தானே என்று கேட்டு மனைவி செல்வியிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது ஏற்பட்ட கைகலப்பில் முருகேசன் மனைவி செல்வியை தாக்கியுள்ளார். இதில் தலையில் அடிபட்ட செல்வி மயங்கி கீழே விழுந்தார். இதனிடையே குடிபோதையில் இருந்த முருகேசன் தன்னுடைய மனைவியை அடித்ததில் அவர் இறந்து விட்டார் என்று பயந்துள்ளார்.
போதையிலிருந்த அவர் மனைவியை கொலை செய்துவிட்டதாக கருதி தனது வீட்டு குளியல் அறைக்கு சென்று அங்கிருந்த கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மயங்கி கிடந்த செல்வி மயக்கம் தெளிந்து எழுந்தவர் அவர் கணவரை காணவில்லை என்று வீடு முழுவதும் தேடினார். குளியல் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலம் கதவை உடைத்து பார்த்தபோது முருகேசன் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், முருகேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காகாபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.