மனைவியை பிரசவத்திற்கு ஹாஸ்பிட்டலில் சேர்த்த கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை!
சேலம்: சேலத்தில் பிரசவத்துக்காக மனைவியை மருத்துவமனையில் சேர்த்த கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகிலுள்ள வெள்ளையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி என்கிற செந்தில். இவர் சங்ககிரியில் பஞ்சர் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜி என்பவருக்கும் ஓர் ஆண்டுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில் விஜி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.
இச்சமயத்தில் மனைவி விஜியை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வைத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரசவத்துக்காக செவ்வாய்க்கிழமையன்று செந்தில் சேர்த்துள்ளார். அதன் பின்னர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதற்கிடையே, சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியை அடுத்த வைகுந்தம் மேட்டுக்காடு ரயில் பாதையில் இளைஞர் ஒருவர் ரயில் மோதி உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடப்பதாக சங்ககிரி போலீஸாருக்கும், ஈரோடு இரயில்வே போலீஸாருக்கும் தகவல் கிடைத்தது.
அந்த இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் செந்தில் என்பது தெரிய வந்தது. அப்போது ரயில் தண்டவாளம் அருகே கிடந்த செந்திலின் இருசக்கர வாகனத்தையும் சங்ககிரி போலீஸார் மீட்டனர்.
இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஈரோடு இரயில்வே போலீஸார் கூறியதாவது:- "திருமணமான 2 ஆவது மாதத்தில் மோட்டார் பைக்கில் செல்லும்போது செந்திலின் தலையில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயத்துக்குப் பிறகு செந்தில் மனநலம் சரியில்லாதவர் போல அவ்வப்போது நடந்து கொள்வாராம்.
நன்றாகப் பேசி கொண்டிருப்பவர் திடீரென விரக்தியடைந்தவர் போல மாறி விடுவாராம். செந்திலின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் அவ்வப்போது செந்திலுக்கு மருத்துவர்கள் மூலம் சிகிச்சையும் அளித்து வந்துள்ளனர். இந்நிலையில், மனைவியைப் பிரசவத்துக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்த செந்தில் திடீரென மாலை 6 மணியளவில் மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பியுள்ளார்.
வைகுந்தம் மேட்டுக்காடு ரயில்பாதை அருகே பைக்கை நிறுத்தி விட்டு அவ்வழியே வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். என்ன செய்கிறோம் என்ற சுயநினைவு இல்லாமலேயே அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.