மதுரை: திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீச்சு
மதுரை: மதுரை திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி ஒன்றில் சின்னப்பூலம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவிகள் மீனா, அங்காள ஈஸ்வரி படித்து வருகின்றனர். மீனா பி.ஏ. முதலாமாண்டும், அங்காள ஈஸ்வரி பி.ஏ. இரண்டாமாண்டும் படிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி முடிந்து ஊருக்கு செல்வதற்காக மாணவிகள் இரண்டு பேரும் பேருந்து நிலையம் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், மாணவி மீனா முகத்தில் ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த நபர் வீசிய வேகத்தில் அருகில் இருந்த மாணவி ஈஸ்வரி மீதும்ஆசிட் பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த மாணவிகளுக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாணவி மீனாவுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மாணவிக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சகமாணவிகள் கூறுகையில், திடீரென வந்தவர் மீனா மீது ஆசிட் வீசிவிட்டு ஓடிவிட்டார். எதற்காக ஆசிட் வீசினார் என்று தெரியவில்லை என்று கண்ணீர் மல்க கூறினர்.
மாணவிகள் மீனாவுக்கு 30 சதவீத காயமும், ஈஸ்வரிக்கு 20 சதவீத காயமும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, தனிப்படை அமைத்து தப்பியோடியவரை தேடி வருகின்றது. அவரை பிடித்த பிறகே எதற்காக மாணவிகள் மீது ஆசிட் வீசினார் என்பது தெரியவரும்.