மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - மகிளா கோர்ட்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ரெஜினா. கூலித் தொழிலாளியான இவர் சொந்தமாக வியாபாரம் செய்யவேண்டும் எனவும், அதற்கு முன்பணம் தேவைப்படுகிறது எனக்கூறி மனைவி ரெஜினா உறுப்பினராக உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவில் மூலம் கடன் வாங்கி தருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், ரெஜினா ஏழுமலைக்கு கடன் வாங்கி கொடுக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த ஏழுமலை, வீட்டிலிருந்த ஐந்து பவுன் நகையை எடுத்துக்கொண்டு போய் அடகு வைத்தார். இதன் காரணமாக, இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரெஜினா, கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போச்சம்பள்ளி போலீஸார் ரெஜினாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஏழுமலையை கைது செய்து அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள் செவ்வாய்க்கிழமை வழங்கிய தீர்ப்பில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய ஏழுமலைக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.