வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை- டார்ச்சர் கணவனுக்கு 3 ஆண்டு சிறை
திருப்பூர்: திருப்பூரில் வரதட்சிணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், மடத்துக்குளம் அருகிலுள்ள தளி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி உமாமகேஸ்வரி. இருவருக்கும் கடந்த 2008 ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது உமாமகேஸ்வரியின் தந்தை வீட்டார் வரதட்சிணையாக 35 பவுன் நகையும், ரூபாய் 30 ஆயிரம் ரொக்கமும் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு இளமதி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது.
மது அருந்தும் பழக்கம் உள்ள கணேசன் அடிக்கடி பணம் கேட்டு உமாமகேஸ்வரியை அடித்து கொடுமைபபடுத்தி வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த உமாமகேஸ்வரி கடந்த 2010 ஜனவரி 19 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பின்னர் விசாரானைக்காக உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டு தற்கொலைக்கு தூண்டிய கணேசனை போலீஸார் கைது செய்தனர்.
நான்கு ஆண்டுகளாக திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
செவ்வாய்க்கிழமை இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது, அதில், வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி உமாமகேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக கணேசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வசந்தலீலா தீர்ப்பளித்தார்.