தாறுமாறாய் தலைக்கேறிய போதை: மனைவியைக் கொன்ற கணவன் கைது
கோவை: கோவையில் குடித்துவிட்டு வந்த கணவன் குடிபோதையில் கட்டிய மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இடையர் பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் மகுடீஸ்வரன். இவரது மனைவி அனுசயாதேவி. இவர்களுக்கு சுசித்ரா என்ற மகள் உள்ளார். மகுடீஸ்வரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இந்த நிலையில் மகுடீஸ்வரன் தனது நண்பர்களுடன் மது அருந்தி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அளவுக்கு அதிகமான போதையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்கு வந்தார்.
குடிபோதையில் வந்த கணவரை கண்ட அனுசயா தேவி ஆத்திரமடைந்தார். பொங்கல் நாளில் குடும்பத்தினருடன் செலவழிக்காமல் மது அருந்தியதற்கு கோபப்பட்டார்.
அதனால் கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் முற்றியது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக வார்த்தைகளால் பந்தாடினர். இறுதியில் வெறுத்துப்போன அனுசயாதேவி குழந்தையுடன் படுக்கைக்கு சென்றார். போதையில் இருந்த மகுடீஸ்வரன் தனது பெல்ட்டை எடுத்து மனைவி அனுசயா தேவியின் கழுத்தை இறுக்கினார்.
இதில் மூச்சு திணறிய அனுசயா தேவி பரிதாபமாக இறந்தார். இன்று காலை போதை தெளிந்த மகுடீஸ்வரன் மனைவியை போதையில் கொலை செய்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையே இவர்களது மகள் சுசித்ரா எழுந்து நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தார்.
குழந்தையின் அழுகுரல் சத்தம் நீண்ட நேரம் கேட்டதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அனுசயா தேவி வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு படுக்கையில் அனுசயா தேவி பிணமாக கிடந்தார். அருகில் அமர்ந்து கொண்டிருந்த மகுடீஸ்வரன் போதையில் மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அனுசயா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.