இறந்த நாயை ப்ரீசரில் வைத்து, ஊர் கூடி அஞ்சலி! நெல்லை மாவட்டத்தில் வினோதம்
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இறந்து போன வளர்ப்பு நாய் குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (54). சென்னை அசோக்நகரில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, இவருடைய 2வது மகன் இறந்து விட்டதால், மனமுடைந்து போய் சொந்த ஊரில் குடியேறினார்.
சென்னையில் அவர்கள் வளர்த்து வந்த டாமி என்ற செல்ல நாயையும் சொந்த ஊருக்கு அழைத்து வந்து செல்லமாக பார்த்துக்கொண்டார். கல்யாண சுந்தரம் அந்த நாயை தனது மகன் போல நினைத்து பாசம் காட்டியுள்ளார்.
இந்நிலையில், ‘டாமி' கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப் பட்டு வந்தது. குடும்பத்தினர் ‘டாமி'யை, கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
சென்னையில் நடைபெற்ற உறவினர் இல்ல விழாவிற்கு கல்யாணசுந்தரம் சென்றிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி டாமி நாய் இறந்து விட்டது.
இந்த தகவலை கல்யாணசுந்தரத்துக்கு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், டாமி உடல் கெடாமல் இருப்பதற்காக, குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வைக்க கூறியுள்ளார்.
அதன்படி, ‘டாமி'யை குளிப்பாட்டி மாலை அணிவித்து குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், குளிர்சாதனப் பெட்டி (ப்ரீசர்) வாடகைக்கு எடுத்து வரப்பட்டு, அதில் நாய் ‘டாமி'யை கிடத்தி, மாலை அணிவித்து குடும்பத்தினர் பாதுகாத்து வந்தனர்.
கல்யாண சுந்தரம் ஊர் திரும்பிய பிறகு, அவரது முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், டாமி நாய் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் திசையன்விளை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.