ஒருதலைக் காதலால் விபரீதம்- இளம்பெண்ணைக் கொல்ல முயன்ற இளைஞர் கைது
திருப்பூர்: திருப்பூரில் இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் ஒருதலைக் காதலுக்காக கொல்ல முயற்சித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பனப்பாளையத்தைச் சேர்ந்தவர் டெய்சி. இவர் திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அப்துல் முல்தாப் என்பவர் டெய்சியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு வீட்டுக்கு நடந்து சென்ற டெய்சியை வழி மறித்து அப்துல் முல்தாப் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். மறுக்கவே கத்தியால் டெய்சியின் கழுத்தில் கிழித்துள்ளார்.
இதில் காயமடைந்த டெய்சியை அப்பகுதி மக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்துல் முல்தாப்பை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.