முதியோரிடம் 110 பவுன் நகை பறித்த பலே ஆசாமி கைது
சென்னை: கோயம்பேடு, திருவல்லிக்கேணி, தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் தனியாக செல்லும் முதியோர்களிடம் பேச்சு கொடுத்து 110 சவரன் நகைகளை மோசடி செய்த பலே திருடனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 110 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.
முதியவர்களிடம் கைவரிசையை காட்டிய திருடனின் பெயர் முரளி என்ற கோட்டி என்பதாகும். இவன் தாம்பரம் நாகல்கேனி பகுதியில் வசித்து வருகிறான். தனியாக வரும் முதியவர்களை குறிவைத்து நகைகளை பறிப்பது இவனது தொழிலாகும்.
செய்யாறு அடுத்த காகனம் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் கடந்த 11ஆம்தேதி தாம்பரத்தில் உள்ள மகள் வீட்டுக்கு பஸ்சில் வந்தார். அப்போது அருகில் இருந்த ஆசாமி ஒருவன் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.
போட்டோ எடுக்கவேண்டும். நகைகள் அணிந்திருக்க கூடாது என்று கூறவே, இதனை நம்பிய வரலட்சுமி போட்டோ எடுப்பதற்காக தான் அணிந்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை அவனிடம் கொடுத்தார். சிறிது நேரத்தில் வெளியே சென்ற அவன் நகை-பணத்துடன் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து தாம்பரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதேபோல் தாம்பரம் மற்றும் சுற்றப்புற பகுதியில் உதவித்தொகை வாங்கித் தருவதாக மோசடி சம்பவம் அடிக்கடி நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து மோசடி ஆசாமியை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். தாம்பரத்தில் வரலட்சுமியை மோசடி ஆசாமி அழைத்து சென்று பேசிய தனியார் வணிக வளாகத்தில் பொருத்தி இருந்த காமிராவை ஆய்வு செய்தனர். அதில் மோசடி ஆசாமியின் உருவம் பதிவாகி இருந்தது.
விசாரணையில் அவன் தாம்பரம் நாகல்கேனியை சேர்ந்த முரளி என்ற கோட்டி என்பது தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்த 110 பவுன் நகைகளை மீட்டனர். அவனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் தனியாக செல்லும் முதியோர்களிடம் பேச்சு கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. மீட்கப்பட்ட நகைகளை இணை கமிஷனர் தினகரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
தமிழக அரசு முதியோர்களுக்கு உதவித் தொகையாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இதனை வாங்குவதற்காக மோசடிப்பேர்வழிகளை நம்பி பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொடுத்து முதியவர்கள் ஏமாந்துள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.