கரூர் எஸ்.பி வந்திதா பாண்டேவை மிரட்ட பொம்மை துப்பாக்கியைக் கொடுத்து விட்டது யார்?
கரூர்: எஸ்.பி வந்திதா பாண்டே தற்கொலை முயற்சி என்ற வதந்தி ஓய்வதற்கு முன்னதாகவே, துப்பாக்கியை கொடுத்து விட்டு எஸ்.பி. ஆபிசுக்கு மிரட்டல் விடுத்தனர் மர்ம மனிதர்கள். விசாரணையில் அது வெறும் விளையாட்டு துப்பாக்கிதான் என்று தெரியவரவே இந்த வேலையை செய்தது யார் என்று விசாரித்து வருகிறது கரூர் எஸ்.பி ஆபிஸ் தரப்பு.
கரூர் பெண் எஸ்.பி வந்திதா பாண்டேவின் பூர்வீகம் உத்தரப்பிரதேசம் அலகாபாத். தமிழக கேடரில் 2010ம் வருட ஐ.பி.எஸ். பேட்ஜ். கடந்த ஐந்து வருடங்களில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றி, மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவர்.
உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட வி.ஐ.பிக்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிவகங்கை சிறுமியிடம், உண்மையில் நடந்ததை வாக்குமூலமாக வாங்கி, அதை சட்டப்படி பதிவு செய்தவர். அதற்கு பரிசாக கரூருக்கு மாற்றல் கொடுத்தது காவல்துறை.
கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டே தற்கொலை முயற்சி.... அவர் மீது துப்பாக்கிச் சூடு " என்றெல்லாம் அடுத்தடுத்து தகவல் வெளியானதில் பரபரப்பானது கரூர் போலீஸ் தரப்பு கடைசியில் அது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்று தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அன்புநாதன் குடோனில் ரெய்டு
கரூரில் அய்யம்பாளையம் அன்புநாதன் வீட்டில் வந்திதா முன்னிலையில் ரெய்டு நடந்தபோது, அவரிடமிருந்து நாலே முக்கால் கோடி ரூபாயை பறிமுதல் செய்தது பாண்டேதான். அப்போதும் மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதுபற்றி எதுவும் கவலைப்படாமல் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தார்.
அவதூறு செய்திகள்
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க காத்திருந்த வேறுசில அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களின் கோபத்துக்கும் பாண்டே ஆளானார். அதன் பிறகுதான், வந்திதாவைப் பறறிய அவதூறு செய்திகள் உலா வர ஆரம்பித்தன.
துப்பாக்கியுடன் வந்த நபர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெங்கடேசன் என்கிற நபர், வந்திதாவிடம் வந்து, முகமூடி அணிந்த ரெண்டுபேர் என்னை கடத்திச் சென்றனர். ஒரு இடத்தில் வைத்து என்னை மிரட்டி, உங்களை கொலை செய்யச் சொல்லி துப்பாக்கி கொடுத்தார்கள். உங்களை கொன்றால், 10 லட்ச ரூபாய் பணம் கொடுக்கறதா சொன்னாங்க. இல்லைன்னா என்னைக் கொல்வேன்னு சொல்றாங்க. என்னைக் காப்பாத்துங்க" என்று கூறி அவரிடம் ஒரு பையைக் கொடுத்து இருக்கிறார்.
பொம்மை துப்பாக்கி
மர்ம நபர்கள் கொடுத்ததாக சொல்லப்படும் அந்த பையில் ஏர் கன் (டாய் கன்) ஒன்று இருந்தது. பார்ப்பதற்கு நிஜ துப்பாக்கி, தோட்டாக்கள் போலவே இருந்துள்ளது. தேர்தலில் வாக்களார்களுக்கு நிச்சயமாக பண பட்டுவாடா செய்வோம். அந்தப் பணத்தை ரெய்டு நடத்தி பறிமுதல் செய்தால், இனி டாய் கன் வராது. நிஜ துப்பாக்கியே உன்னை கொல்லும்" என்று வந்திதாவை மிரட்டும் தொனியில் இருந்தது இந்த சம்பவம்.
அன்புநாதனின் எதிரிகள்
அய்யம்பாளையம்அன்புநாதனிடம் சமீபத்தில் நாலே முக்கால் கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததில் வந்திதாவுக்கு பெரும் பங்கு உண்டு. இந்த விஷயத்தில் அன்புநாதன், வந்திதா மீது கோபமாய் இருப்பார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அன்புநாதனின் அரசியல் எதிரிகளே பொம்மை துப்பாக்கியை கொடுத்து அனுப்பிவிட்டு, பழியை அன்புநாதன் மீதே போடுகிறார்களோ?" என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
தலைமறைவான அன்புநாதன்
ரெய்டு நடந்த தினத்தன்று தப்பி ஓடிய அன்புநாதன் எங்கே தலைமறைவாக பதுங்கியிருக்கிறார் என்று தெரியாத நிலையில், தினசரி அன்புநாதனின் பெயர் ஊடகங்களில் வெளிவருமாறு செய்வது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொம்மை துப்பாக்கி என்று தெரிந்தும் தலைவர்கள் அறிக்கை விட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சிறுமி பலாத்கார வழக்கு
இது ஒருபுறம் இருக்க சிவகங்கை சிறுமி விவகாரத்தில், வந்திதாவால் பாதிக்கப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகளின் தூண்டுதல் காரணமாக கொலை முயற்சி நிஜமாகவே நடந்ததா? என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடக்கிறது.
வந்திதாவின் அதிரடி
கரூர் வருவதற்கு முன்பு சிவகங்கையில் வந்திதா ஏ.எஸ்.பியாக பணியாற்றினார். தெற்கு மண்டல போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர், சிவகங்கை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. போலீஸ் சரிவர நடவடிக்கை எடுக்காததால், விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. அந்த காலகட்டத்தில், அந்த சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கியவர் வந்திதா.
வந்திதா மறுப்பு
அந்த வாக்குமூலத்தில் தன்னை பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரிகள் பெயர்களை எல்லாம் அந்த சிறுமி பட்டியல் போட்டு சொல்லி இருந்தார். அதன்பின்பு சிறுமியின் வாக்குமூலத்தில் சிக்கிக்கொண்ட போலீஸ் அதிகாரிகள், வந்திதாவுக்கு குடைச்சல் கொடுத்து தங்கள் பெயர்களை நீக்கச் சொல்லி வற்புறுத்த, கறாராக மறுத்து விட்டார், வந்திதா.
கரூருக்கு மாற்றல்
நேர்மையாக சிறுமியின் வாக்குமூலத்தை எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கே கொண்டுபோய் சேர்த்தார். அந்த கோபத்தில் மாட்டிக் கொண்ட போலீஸ் அதிகாரிகள் சிலர், கூட்டணி அமைத்து வந்திதாவுக்க்கு நெருக்கடி கொடுத்தனர். அந்த சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கியதால், இவரின் சாட்சி வழக்கிற்கு முக்கியமானதாக அமைந்தது. திடீரென வந்திதாவை பதவி உயர்வு என்கிற பெயரில் சிவகங்கையை விட்டு கரூருக்கு மாற்றினர்.
குற்றவாளி யார்?
இப்போது வந்திதா பாண்டே விவகாரத்தை சைபர் க்ரைம் நிபுணர்கள் உதவியுடன் முதலில் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் கொடுத்தது யார்? என்று அதிகாரிகள் துப்பறிய ஆரம்பித்து விட்டனர். முதலில் வந்திதா விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து தோண்ட ஆரம்பித்து கரூரை சேர்ந்த மர்ம ஆசாமிகளை தங்களின் கண்கானிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்து விட்டனர். இன்னும் ஓரிருநாளில் உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளி சிக்கினால் மட்டுமே இதற்கான மூல காரணம் யார் என்பது தெரியவரும்.