ஜல்லிக்கட்டால் கொந்தளித்துக் கிடக்கும் மெரீனா.. குடியரசு விழா எப்படி நடக்கும்?
சென்னை மெரினா கடற்கரை ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக கொந்தளிப்புடன் காணப்படுவதால் இந்த ஆண்டு குடியரசு தின விழா பேரணி நடைபெறுமா என்பது பெரும் சந்தேகத்துக்குரியதாகியுள்ளது.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு போராட்டம் ஆறாவது நாளாக நடைபெற்று வருவதால் குடியரசு தினவிழா எங்கு நடத்தப்படும்
என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி அதனை நடத்த வேண்டும். அதற்கு நிரந்தர சட்டம் வேண்டும்; பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மெரினா கடற்கரையில் ஆறாவது நாளாக மிகப் பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாணவர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக முதல்வர் ஓ.பி.பன்னிர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்த அவசர
சட்டம் கொண்டுவந்தார். ஆனால், போராடும் மாணவர்களும் பொதுமக்களும் 'எங்களுக்கு தேவை நிரந்தர சட்டம்; அவசர சட்டமல்ல' என அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்.
இதையடுத்து, அலங்காநல்லூரில் முதல்வர் ஜல்லிக்கட்டை தொடங்கிவைப்பார் என அரசு அறிக்கை வெயிட்டது. ஆனால், அலங்காநல்லூரில் எழுந்த பலத்த எதிர்ப்பால்
முதல்வர் தன்னுடைய அறிவிப்பில் இருந்து பின்வாங்கி சென்னைக்கு திரும்பவுள்ளார். மறுபக்கம் மெரினாவில் நடைபெறும் போராட்டம் மிகவும் தீவிரமடைந்து வருகிறது.
சென்னை மெரீனாவை நோக்கி மக்கள் சாரைசாரையாக சென்றுகொண்டிருக்கின்றனர். இதையடுத்து தமிழக அரசு, அங்கு 7000 காவலர்களை குவித்துள்ளது. இந்நிலையில், இன்னும் நான்கு நாட்களில் குடியரசு தினவிழா நடக்கவுள்ளது.
ஆனால், மெரினா காமராஜார் சாலையில்தான் எப்போதும் குடியரசு தின விழா நடக்கும். அதற்காக நான்கைந்து நாட்கள் முன்னதாக அங்கு அதிகாரிகள் பார்வையிட்டு, அப்பகுதியை சுத்தம் செய்வர். அவர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை
செய்வார். அன்று பெரிய அளவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளும் நடக்கும். ஆனால், இப்போது அங்கு பல லட்சக்கணக்கான மக்கள் கூடியிருப்பதால், அங்கு எந்த ஏற்பாடுகளையும் செய்ய இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு, குடியரசு தினத்தை வேறெங்கேனும் நடத்த மாற்று இடத்தை தேர்வு செய்துள்ளதா? என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் குடியரசு தினம் எப்படி, எங்கு நடத்தப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.