வரலாறு படைக்கும் மெரீனா.. இளைஞர் படையின் செல்போன் விளக்கொளியில் ஜொலித்தது!
சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் செல்போன் விளக்குகளை இயக்கி அதிர வைத்தனர்.
சென்னை: சென்னை மெரீனா கடற்கரை மீண்டும் மீண்டும் வரலாறு படைத்து வருகிறது. புரட்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் பட்டாளத்தின் செல்போன் வெளிச்சத்தில் மீண்டும் மெரீனா ஒளிர்ந்து மக்கள் சக்தியை மகத்தான வெளிச்சத்தில் எடுத்துக் காட்டி அசர வைத்து வருகிறது.
மெரீனாவில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் போராட்டம் வீறு கொண்டு நடந்து வருகிறது. முதல் நாள் போராட்டத்தின்போது போராட்டத்தை ஒடுக்குவதற்காக விளக்குகளை அணைத்து காவல்துறை பயமுறுத்திப் பார்த்தது. ஆனால் இளம் படையாச்சே.. செல்போனை எடுத்து அதில் உள்ள டார்ச்சை இயக்கி உயர்த்திப் பிடித்த காவல்துறையை அதிர வைத்தது.
செல்போன் விளக்கொளியில் மெரீனாவே ஒளிர்ந்ததை உலகமே பார்த்து தடதடத்துப் போனது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போது இந்த விளக்கொளி போராட்டமும் வரலாற்றில் பதிவாகி விட்டது. இன்றும் மாலை சூரியன் கவிழ்ந்ததும் செல்போன் வெளிச்சத்தைக் காட்டி அசரடித்து விட்டனர் இளம் படையினர். ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் செல்போன் லைட்டை இயக்கி உயர்த்திப் பிடித்தது வானில் உள்ள நட்சத்திரங்கள் மெரீனாவில் வந்து விழுந்து விட்டதோ என்று வியக்க வைத்து விட்டது.
மக்கள் சக்திக்கு முன்பு எல்லாமே தூசு என்பதை நிரூபிப்பதாக உள்ளது மெரீனா போராட்டம்.