தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொலை.. மே 17 இயக்கத்தினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
யாழ்பாணத்தில் தமிழ் மாணவர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் மே 17 இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
சென்னை: இலங்கையில் தமிழ் மாணவர்கள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மே 17 இயக்கம் சார்பில் சென்னையில் இலங்கை தூதரகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இலங்கை வடக்கு மாகாண பகுதியில், யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் 2 பேரை இலங்கை போலீசார் சுட்டுப் படுகொலை செய்தனர். முதலில் அவர்கள் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பின்னர் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து இலங்கை வடக்கு மாகாணப் பகுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது இலங்கை அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து இலங்கை தூதரகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மே 17 இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.