எம்.சி.ஏ படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்- 613 மாணவர்களுக்கு அழைப்பு!
கோவை: தமிழகத்தில் எம்.சி.ஏ படிப்பிற்கான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் நேற்று துவங்கியது. இன்று பொதுப்பிரிவு கலந்தாய்வு நடக்க உள்ளது. சிறப்பு பிரிவின் கீழ் ஒரு மாற்றுத்திறனாளி மாணவர் தேர்வு பெற்றுள்ளார்.
தமிழகத்தில்160 எஞ்சினியரிங் கல்லூரிகளிலும், 126 கலை அறிவியல் கல்லூரிகளிலும் எம்.சி.ஏ பிரிவு செயல்பாட்டில் உள்ளது. அரசு இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இக்கலந்தாய்வுக்கு கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி, மாநில கலந்தாய்வு மையமாகும். முதல்கட்டமாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் ஒரு மாணவர் மட்டுமே விண்ணப்பித்து இருந்ததால் எளிதாக விரும்பிய கல்லுாரியை தேர்வு செய்தார். முதல் நாளான நேற்று கலந்தாய்வு பணிகள் காலை 10 மணிக்கே முடிவுபெற்றது.
இன்று பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வில் தரவரிசை பட்டியலின் அடிப்படையில் பங்கேற்கின்றனர்.இக்கலந்தாய்வு வரும் 31 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. பொதுப்பிரிவில் 3,112 மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நாளான இன்று பொதுப்பிரிவில் 613 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் போதிய சான்றிதழ்களை தவறாமல் எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.