காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்த மத்திய பாஜக அரசுக்கு மதிமுக கண்டனம்!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய பாஜக அரசுக்கு மதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற் குழுவை உடனே அமைக்க மதிமுக வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற் குழுவை உடனே அமைக்க மதிமுக வலியுறுத்தியுள்ளது.
மேலும் காவிரி நதிநீர் ஒப்பந்தம் 1924 ல் ஏற்பட்டது. எழுபதுகளில் கர்நாடக அரசு தமிழகத்தை வஞ்சித்தது. இரண்டு மாநில அரசுகளும் இருபதுக்கும் மேற்பட்ட பேசியும், தமிழ்நாட்டுக்கு உரிய நியாயம் கிடைக்காததால், பிரச்சினை உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் 1990 ஜூன் மாதம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன் இறுதித் தீர்ப்பு2007 பிப்ரவரி 5 ஆம் தேதி வழங்கப்பட்டது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், 2013 பிப்ரவரி 20 ஆம் தேதிதான் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டது.
அதன்படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அமைக்கவில்லை. காவிரி நதி நீரை நம்பி இருக்கின்ற தமிழகத்தில் 20 இலட்சம் ஏக்கர் பாசனத்தை, கர்நாடகத்தின் அடாவடிப் போக்கால் இழந்தோம். இந்த ஆண்டு மட்டும் இதனால் 8000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொல்லி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தபோது முதலில் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அதன் பின்பு முடியாது என்று உச்சநீதிமன்றத்திலேயே மறுத்து விட்டது. இது மிகப்பெரிய அநீதி ஆகும்.
ஆசியாவின் நெற்களஞ்சியமாக இருந்த தஞ்சைத் தரணி, பிச்சைப் பாத்திரம் ஏந்த வேண்டிய நிலைமைக்கு ஆளாகிக் கொண்டு இருக்கின்றது. ஹெல்சிங்கி விதிகளின்படி, கடைமடைப் பாசனப் பகுதிக்குச் சட்டப்படியான உரிமைகள் இருக்கின்றன.
தமிழ்நாட்டுக்கு மற்றொரு ஆபத்தாக, காவிரிக்குக் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடக அரசு இரண்டு புதிய அணைகளைக் கட்ட இருக்கின்றது. இதனை மத்திய அரசு மறைமுகமாக ஊக்குவிக்கின்றது. அதனால் நிதி ஒதுக்கீடு செய்து அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டு இருக்கின்றது. அப்படிப் புதிய அணைகள் கட்டினால், எதிர்காலத்தில் சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழகத்துக்கு வராது. தமிழ்நாடு பாலைவனம் ஆகும்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கைவிட்ட அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற இன்றைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ஒரு மாநிலத்தில் உள்ள அணைக்கட்டுகள் நீர்த்தேக்கங்கள் குறித்து முடிவு எடுக்கின்ற முழு அதிகாரமும் அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்கப்படும். இதனால் தமிழகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற் குழுவை உடனே அமைக்க வேண்டும் எனவும் மதிமுக வலியுறுத்தியுள்ளது.