விஜயகாந்த் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் - தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ பேச்சு
சென்னை: சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக வெற்றி பெற்று விஜயகாந்த் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று கூறிய வைகோ, இன்னும் ஓரிரு நாளில் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட உள்ளதாக கூறினார்.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளில், மதிமுக சார்பில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வழங்கப்பட்டன.
மீதமுள்ள 2 தொகுதிகள் மதிமுகவுடன் இணைந்த "தமிழர் முன்னேற்றப் படை', "தமிழ் புலிகள் இயக்கம்' ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட உள்ளன.
வேட்பாளர் கட்டணம் பொதுத் தொகுதிக்கு ரூ.25 ஆயிரம், மகளிர்- தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இரவு வரை 27 தொகுதிகளுக்குமான வேட்பாளர் நேர்காணலை மதிமுக தலைமை அலுவலகத்தில் வைகோ தலைமையிலான குழு நடத்தி முடித்தது.
இந்த நிலையில்,இன்று தனது மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ சென்னை அண்ணாநகரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
அப்போது பேசிய வைகோ, சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக வெற்றி பெறும் என்று கூறினார். விஜயகாந்த் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறிய வைகோ, மது குடித்துவிட்டு வருபவர்களுக்கு கூட்டத்தில் அனுமதியில்லை என்று கூறினார். தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு ரூ. 2000 வரை அதிமுகவினர் கொடுப்பதாக வைகோ குற்றம் சாட்டினார்.
வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று கூறிய வைகோ தேர்தல் அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று தெரிவித்தார்.