சீமை கருவேல மரங்களை வெட்டிய வைகோ- கட்டாந்தரையில் படுத்து ஓய்வு!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சீமை கருவேல மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டார்.
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்டாந்தரையில் படுத்திருந்து சீமை கருவேல மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் 1960ஆம் ஆண்டு சீமை கருவேல மரங்கள் வேலிக்காக விதைகளை கொண்டு நடப்பட்டது. இதையடுத்து இந்த சீமை கருவேல மரம் மாநிலம் முழுவதும் தீயாக பரவியுள்ளது.
இந்த சீமை கருவேல மரங்கள் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி கார்பன் டைஆக்ஸைடை வெளியிட்டு வருகிறது. மழை பெய்வது தடுக்கப்படுகிறது. மேலும் நிலத்தடி நீரையும் இருந்த சீமை கருவேல மரங்கள் உறிஞ்சி விடுகின்றன.
தமிழக அரசுக்கு உத்தரவு
இந்நிலையில் இதுகுறித்து மதிமுக சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் நீர்நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மரம் வெட்டிய வைகோ
இதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஹோட்டல் ஹைவே அருகில் உள்ள சீமை கருவேல மரங்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் வெட்டி அகற்றினர்.
கட்டாந்தரையில் படுத்த வைகோ
சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்றிய வைகோ வேலையின் நடுவே கட்டாந்தரையில் அட்டை பேப்பரை விரித்து படுத்து இளைப்பாறினார். இந்தபோட்டோக்கள் இணையதளங்களில் பரவி வருகிறது.
தமிழக அரசு மீது குற்றச்சாட்டு
இதில் மல்லை சத்யா உட்பட மதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது சீமை கருவேல மரங்களை அகற்றுவதில் தமிழக அரசு அலட்சியத்துடன் நடந்து கொள்வதாக வைகோ குற்றம்சாட்டினார்.