2000 பேருடன் திமுகவில் இணைந்தார் மதிமுக முன்னாள் பொருளாளர் மாசிலாமணி
சென்னை: மதிமுக முன்னாள் பொருளாளர் மாசிலாமணி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார். மேலும் பலர் திமுகவில் இணைவார்கள் என்றும் மாசிலாமணி தெரிவித்துள்ளார்.
மதிமுகவிலிருந்து அண்மையில் விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநில பொருளாளர் மாசிலாமணி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஹேமா, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயளாளர் நடராசன் உள்ளிட்ட மதிமுக தொடண்டர்கள் ஏராளமானோர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது பேசிய கருணாநிதி, மாசிலாமணியை மனதார வரவேற்பதாகவும், திராவிட இயக்கத்தை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாசிலாமணி, 6 பேர் இணைந்து உருவாக்கிய மக்கள் நலக்கூட்டியக்கத்தில் இருந்து முதலில் காந்திய மக்கள் இயக்கம் வெளியேறியது. இப்போது மனிதநேய மக்கள் கட்சி வெளியேறியுள்ளது. மேலும் மக்கள் நல கூட்டியக்கம் தேர்தல் வரை நீடிப்பது சந்தேகம்தான் என்றார். வைகோவின் தன்னிச்சையான முடிவு காரணமாக மதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவில் இணையும் முனைப்பில் இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார் மாசிலாமணி.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக பாலவாக்கம் சோமு கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமார் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் மதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இந்த நிலையில் திமுகவில் மாசிலாமணி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.