கமிஷனர் பதவியேற்புக்கு அழைக்கப்படாத பத்திரிகையாளர்கள்!
சென்னை: சென்னை மாநகர போலீஸ் ஆணையராக டி.கே.ராஜேந்திரன் மீண்டும் பதவியேற்றுள்ளார். ஆனால் அவரது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை, அனுமதிக்கவும் படவில்லை.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு ராஜேந்திரன்தான் கமிஷனராக இருந்து வந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் சரமாரிப் புகார்களைத் தொடர்ந்து அவரை தேர்தல் ஆணையம் இடம் மாற்றியது. அசுதோஷ் சுக்லா புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தேர்தல் முடிந்து அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தால் இடம் மாற்றம் செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும் மீண்டும் அதே பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக மீண்டும் டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து சென்னையின் 103வது கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் ராஜேந்திரன். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. வழக்கமாக பத்திரிகையாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு கமிஷனர் பதவியை ஏற்பவர்கள் பேட்டியும் தருவார்கள். ஆனால் நேற்று இந்த சடங்குகள் நடைபெறவில்லை.
பாரம்பரியம் மிக்க சென்னை போலீஸ் கமிஷனர் பதவியை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், சென்னை மக்களுக்காக பாடுபடுவேன் என்றும், அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் டி.கே.ராஜேந்திரன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.