பணம் செலுத்த முயற்சிக்கும்போதே, லதா ரஜினியின் நிலத்தை கையகப்படுத்தியது தவறு - மீடியா ஒன்
சென்னை: கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும்போதே, உத்தரவாதமாக காட்டப்பட்ட லதா ரஜினியின் சொத்தை கையகப்படுத்தியதாக எக்ஸிம் வங்கி அறிவித்துள்ளது தவறானது என்று மீடியா ஒன் விளக்கம் வெளியிட்டுள்ளது.
மீடியா ஒன் குளோபல் நிறுவனம் எக்ஸிம் வங்கியில் வாங்கிய ரூ 20 கோடி திருப்பித் தரும் வணிகக் கடனுக்கு உத்திரவாதமாக லதா ரஜினியின் பெயரில் இருக்கும் படப்பை நிலத்தைக் காட்டியிருந்தனர்.
இந்தத் தொகையை உரிய நேரத்தில் செலுத்தத் தவறியதற்காக லதா ரஜினியின் அந்த நிலத்தை கையகப்படுத்திவிட்டதாக இன்று பத்திரிகையில் பெரிய விளம்பரம் கொடுத்திருந்தது எக்ஸிம் வங்கி.
இது ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுகுறித்து மீடியா ஒன் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளது.
அதில், "மீடியா ஒன் குளோபல் நிறுவனம் பத்தாண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் உள்ளது. எக்ஸிம் வங்கியிடம் வாங்கிய ரூ 20 கோடியை தானே திருப்பிச் செலுத்தும் சக்தி எங்களுக்கு உண்டு.
இந்தக் கடனை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் திருப்பிச் செலுத்திவிடுவதாக வங்கிக்கு உத்தரவாதம் அளித்திருந்தோம். வங்கி அதிகாரிகளும் ஒப்புக் கொண்ட நிலையில், திடீரென நிலத்தை கையகப்படுத்தியதாக அறிவித்துள்ளனர்.
முதன்மைக் கடனாளிகளான நாங்கள் பணத்தை திருப்பிச் செலுத்த முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போதே, எங்களுக்கு உத்தரவாதமளித்த லதா ரஜினிகாந்த், தேவேந்தர் ஆகியோரை பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளது வங்கி.
இந்த விஷயத்தில் லதா ரஜினி பற்றி மேற்கொண்டு செய்தி வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
இது கடன் பெற்ற கார்ப்பொரேட் நிறுவனத்துக்கும், வங்கிக்கும் இடையிலான ஒரு பிரச்சினைதான். விரைவில் தீர்க்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.