மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடக்கம்- தமிழக அரசு
இன்னும் ஒரு வாரம் அல்லது அதிகபட்சம் 10 நாள்களுக்குள் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளியிட விதிக்கப்பட்ட தடை நீங்கியதால் இன்னும் ஒரு வாரத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு ஒரே மாதிரியான சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதால் தேசிய தகுதிகாண தேர்வு எனப்படும் நீட் தேர்வை இந்த ஆண்டில் மத்திய அரசு கட்டாயமாக்கியது.
இதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில் 88,000 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஒரு சிலர் மெட்ரிக் பாடத்திட்டம்தான் கேட்கப்பட்டது எனவும், ஒரு சிலர் சிபிஎஸ்இ பாடதிட்ட கேள்விகள்தான் கேட்கப்பட்டனா என்றும் தெரிவித்தனர்.
இதனிடையே ஜூன் 8-ஆம் தேதி வெளியிட வேண்டிய தேர்வு முடிவுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்தது. இதனிடையே பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது.
ஆனால் நீட் தேர்வு குறித்த வழக்கு நிலுவையில் இருந்ததால் மருத்துவம், பல் மருத்துவத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நீட் முடிவுகளுக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி சிபிஎஸ்இ வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அந்த வழக்கை அவசர வழக்காக இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை விதித்த தடை உத்தரவை உச்சநீதிமன்றம் நீக்கியது. மேலும் தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியை சிபிஎஸ்இ வாரியமே முடிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது. அதிகபட்சம் 10 தினங்களுக்குள் இந்த பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தது.