முதல்வரின் 110 அறிவிப்புகளுக்கு கைதட்டுவது மட்டுமே அமைச்சர்களின் வேலையாகி விட்டது.. அன்புமணி தாக்கு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் வெளியிடும் வெற்று அறிவிப்புகளுக்கு கைதட்டுவதே அமைச்சர்களின் வேலை என்றாகி விட்டது என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கைதட்டுவது மட்டுமே வேலை:
"தமிழக அரசின் அனைத்து அறிவிப்புகளையும் 110 விதிப்படி முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே வெளியிட வேண்டும்;அந்த அறிவிப்புகளுக்கு கை தட்டுவது மட்டுமே அமைச்சர்கள் வேலை என்பது எழுதப்படாத சட்டமாகி விட்டது. அதன்படியே சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் பணி நாளிலேயே சுகாதாரத்துறை குறித்த அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
22 திட்டங்கள்:
முழு உடல் பரிசோதனைத் திட்டம் உட்பட 22 திட்டங்களை சுகாதாரத்துறை சார்பில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 110 ஆவது விதியின் கீழ் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.1.27லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படாத வெற்று அறிவிப்புகளாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி:
கரூர் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரியை அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாகவும், அடுத்தகட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியைத் தருவதற்கு பதில் நகைப்பைத் தான் தருகிறது. காரணம் அவரது கடந்த கால செயல்பாடுகள் தான்.
கரூர் மருத்துவக் கல்லூரி என்னவானது:
கரூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பை கடந்த 12.08.2014 அன்று 110 விதியின் கீழ் அறிவித்தார். அதைத்தொடர்ந்து 19.01.2015 வெளியிடப்பட்ட அரசாணையில் அடுத்த ஆண்டு முதல் கரூர் மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேலாகியும் கரூர் மின்னாம்பள்ளியில் இடம் தேர்வு செய்யப்பட்டதைத் தவிர வேறு எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை.
எப்படி தயாராகும்:
இந்த நிலையில் இன்னும் 9 மாதங்களில் தொடங்கவிருக்கும் 2016&17 ஆம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கு கரூர் மருத்துவக் கல்லூரி எப்படி தயாராகும் எனத் தெரியவில்லை. அதேபோல் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கான அறிவிப்பு கடந்த 12.01.2011 அன்றே சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டு விட்டது. இந்த உண்மையை மறைத்து விட்டு புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பை புதிதாக வெளியிட்டதைப் போல காட்டி மக்களையும், பேரவையையும் ஏமாற்ற முயன்றிருக்கிறார் ஜெயலலிதா.
எதுவும் திறக்கப்படவில்லையே:
2011 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு, புதிய தலைமைச் செயலகத்தை மாற்றம் செய்து திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியைத் தவிர எந்த ஒரு மருத்துவக் கல்லூரியும் புதிதாக அறிவிக்கப்பட்டு திறக்கப்படவில்லை. அந்தக் கல்லூரிக்காக சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றிய சிறந்த பேராசிரியர்கள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டதால் அந்தக் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
5 மருத்துவக் கல்லூரிகள் எங்கே:
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு திறக்கப்பட்ட திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி பா.ம.க.வின் தொடர் வலியுறுத்தலால் முந்தைய ஆட்சியில் 2009 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டதாகும். அதேபோல், சிவகங்கை மருத்துவக் கல்லூரியும் முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டது தான். அதுமட்டுமின்றி, கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட மேலும் 5 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்காக அ.தி.மு.க. அரசு இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
அடிக்கல் நாட்டியதோடு சரி:
கடலூர், திண்டுக்கல் ஆகிய நகரங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக 2011 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு 2011 ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்புகளை செயல்படுத்த கடந்த 4 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல், இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க கொள்கையளவில் முந்தைய அரசு ஒப்புதல் அளித்த போதிலும், அதற்கு இதுவரை செயல் வடிவம் தரப்படவில்லை.
பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி:
அதற்கு முன்பே 2008 ஆம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் கோரப்பட்டன. ஆனால், அதன்பின் 3 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சியில் இருந்த போதிலும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. அதன்பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இப்பிரச்சினையில் தலையிட்ட சென்னை உயர்நீதிமன்றம் பெரம்பலூர் மருத்துவக் கல்லூரியை 2014 -15 ஆம் ஆண்டில் திறக்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், 2015 -16 ஆம் ஆண்டு தொடங்கிவிட்ட நிலையில், அக்கல்லூரிக்கு அடிக்கல் கூட நாட்டப்பட வில்லை.
தரமான கல்லூரிகள்தான் தேவை:
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தரமான அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதைத் தான் கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இத்தகைய சூழலில் புதிய மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்குவதாக வெற்று அறிவிப்புகளை வெளியிட்டால் மட்டும் போதாது. அதற்குப் பதில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.