ஆன்லைன் வர்தகத்திற்கு எதிர்ப்பு: அக்.14ல் மருந்து கடைகள் அடைப்பு
சென்னை: ஆன்லைனில் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய முழுவதும் அக்டோபர் 14ம் தேதி அனைத்து மருந்து கடைகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்-லைனில் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தற்போது தடை உள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை முதல் குமரி வரை 40 ஆயிரம் மருந்து கடைகள் 24 மணி நேரமும் மூடப்படும். இணையதள மருந்து விற்பனையால் போலி மருந்துகள், முறைகேடுகள் அதிகரிக்கும் என மருந்து விற்பனையாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
13ம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 14ம் தேதி புதன்கிழமை 12மணி வரை வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும். தேவையான மருந்துகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வணிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் 8 லட்சம் மருந்து கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 700 கடைகள் இருக்கின்றன. தமிழகத்தில் தினமும் ரூ.55 கோடிக்கு மருந்து விற்பனையாகிறது. கடை அடைப்பினால் கோடி கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும்.