மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வை சென்னையில் நடத்த வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை:தமிழக மருத்துவர்களின் நலன்கருதி மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவு தேர்வினை சென்னையில் நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒவ்வொரு வருடமும் அகில இந்திய மருத்துவ மேல்படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும். சென்னையில் பெய்த தொடர் மழையால் அகில இந்திய மருத்துவ மேல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு வரும் ஜனவரி 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தேர்வு எழுத உள்ளனர். ஆனால், சென்னையில் தேர்வு எழுத வேண்டிய பலருக்கு ஜம்மு காஷ்மீர், அசாம், ஒடிசா, டெல்லி போன்ற வட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பண்டிகை காலமாக இருப்பதால் தேர்வு எழுதுவதற்காக அங்கு சென்று வருவதற்கு ரயில் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. மேலும் விமானப் பயணத்திற்கும் அதிகப்படியான செலவாகும். இதற்காக சென்றுவர 6 நாட்களுக்கும் மேலாகும். எனவே தேர்வு எழுத இருக்கும் தமிழக மருத்துவர்களுக்கு சென்னையிலேயே தேர்வு மையம் அமைத்து அவர்களது சிரமத்தை தவிர்த்திட வேண்டும்.
அகில இந்திய மருத்துவ கவுன்சில் இதை நடைமுறைப்படுத்தி, தமிழக மருத்துவர்கள் சென்னையிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு வாசன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.