கேரளாவின் குப்பைத் தொட்டி தமிழகம்.. மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த 24 லாரிகள்..பொதுமக்கள் சிறைபிடிப்பு
கேரளாவின் மருத்துவக் கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது தமிழகம்
கோவை: கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த 24 லாரிகள் கோவை மதுக்கரையில் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது.
கேரளாவில் இருந்து கோவை மதுக்கரைக்கு நேற்று 24 லாரிகளில் மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த லாரிகள் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு ஒவ்வொரு லாரியாக குப்பைகள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மிக மோசமான துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
இதனையடுத்து, நிற்க வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டுபிடித்த பொதுமக்கள் அந்த லாரிகளை சிறை பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த லாரிகள் அனைத்தும் கேரளாவில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ரசாயன மருந்து கழிவுகளை ஏற்றி கொண்டு கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, எட்டிமடையைச் சேர்ந்த செல்லப்பக் கவுண்டர் என்பவரது விவசாய நிலத்தை கழிவுகள் கொட்டுவதற்கு முகமது இலியாஸ் வாடகைக்கு எடுத்துள்ளது தெரிய வந்தது. இந்த இடத்தில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து முகம்மது இலியாஸ் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகிவிட்ட நிலத்தை வாடகைக்கு கொடுத்த செல்லப்பக் கவுண்டர் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரளாவில் இருந்து இதுபோன்ற மருத்துவ கழிவுகளை கொண்டு வரும் லாரிகள் சோதனைச் சாவடிகளில் 200, 300 ரூபாய் லஞ்சம் கொடுத்து தமிழகத்திற்குள் நுழைவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். அதுவும் இரவோடு இரவாக லாரிகளில் கொண்டு வரப்பட்டு கழிவுகள் கொட்டப்பட்ட பின்னர் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் லாரிகள் சென்று விடுகின்றன. மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் கழிவுகள் இங்கு இறக்கப்படுவது குறித்து யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறது. கேரளாவில் இருந்து டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருவதால், கதிர் வீச்சு அபாயம் இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து எட்டிமடை வட்டாட்சியர் சிவசங்கரன் விசாரித்து வருகிறார். மக்களால் சிறைபிடிக்கப்பட்ட 24 மருத்துவ கழிவு லாரிகளை கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்படும் என்று வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.