தூதுவளை: ஆஸ்துமாவை நீக்கும்... ஆண்மையை அதிகரிக்கும் மூலிகை
நெஞ்சில் உள்ள சளியை நீக்கும்.. ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் தூதுவளை ஆயுளை அதிகரிக்கும் காயகர்ப்ப மூலிகையாக போற்றப்படுகிறது.
சென்னை: சளி பிடித்தால் சனி பிடித்தது போல என்று சொல்வார்கள், நெஞ்சு சளி பிடித்துக்கொண்டால் இருமல் வாட்டி வதைத்து விடும். தூதுவளை என்ற மூலிகை இருமலை போக்குவதோடு சளியை அடியோடு நீக்கிவிடும்.
மழை, காற்று, கடும் வெயில் என சீதோஷ்ண நிலை மாறி மாறி வருகிறது. இதில் பலருக்கு சளி தொந்தரவு ஏற்படுகிறது. கீரைக்காரம்மாவிடம் தூதுவளைக்கு சொல்லி வையுங்கள்.
ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்தும், ஆண்மையை அதிகரிக்கும் என்று தூதுவளை பற்றி சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தூதுவளை இலை அரைச்சு... தொண்டையிலதான் நனைச்சு மாமன்கிட்ட பார்க்கப்போறேன் மணிக்கணக்கா என்று ஒரு பாட்டே உள்ளது. நுரையீரலை பாதுகாக்கும் அற்புத அருமருந்து இந்த தூதுவளை. இதற்கு சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு.
சிறிய முட்களுடன் கூடிய கொடி வகை. பூக்கள் ஊதா நிறத்தில் பூக்கும். வேலிகளில் அதிகம் பற்றி படந்து காணப்படும்.
சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. வீடுகளில் இடம் இருப்பவர்கள் தூதுவளையை தொட்டியில் வளர்க்கலாம்.
தூதுவளை இலை
தூதுவளை இலைகள் கீரையாகப் பயன்படுத்தப்படுகின்றன. இலை, பூ, காய் போன்றவை மருத்துவக் குணம் கொண்டவை.இந்திய, தாய்லாந்து பாரம்பரிய மருத்துவங்களில் கைமருந்தாக நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைகளிலும் முட்கள் அதிகம் இருக்கும். பயன்படுத்துவதற்கு முன் முட்களை அகற்றிவிட வேண்டும்.
நெஞ்சுச்சளி குணமாகும்
சளி, இருமல், மார்புச்சளியைக் குணப்படுத்தத் தூதுவளை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இலைகளை நிலக்காய்ச்சலில் காய வைத்துப் பொடியாக்கி மருந்து போலப் பயன்படுத்தலாம்.
தூதுவளை துவையல்
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.
தூதுவளை கசாயம்
தூதுவளை இலையைக் கஷாயம் வைத்து, 1 கிராம் திப்பிலி பொடி சேர்த்துச் சாப்பிட்டால் நெஞ்சில் கட்டிக்கொண்டிருக்கும் சளி, காய்ச்சல் போன்றவை குணமடையும். தூதுவளையால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதைத் தவிர்க்க நெய் அல்லது பால் சேர்த்துக்கொள்ளலாம்.
உடல் வலிமை
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
ஆண்மை அதிகரிக்கும்
தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாக்கி ஆண்மையைக் கூட்டும்.
விந்தணு அதிகரிக்கும்
தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். தூதுவளைப் பூக்கள், மொட்டுக்களை நெய்யில் வதக்கி, பணங்கல்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து ஆறவைத்து காய்ச்சிய பால் சேர்த்து சாப்பிடலாம்.
கருப்பை புற்றுநோய் குணமாகும்
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது.
பூரண குணமடையலாம்
தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய நேரிட்டால் தூதுவளை இலையைப் பயன்படுத்தி, சில மாதங்களிலேயே பூரண குணமடையலாம். என்ன மக்களே இனி தூதுவளையை மிஸ் பண்ண மாட்டீங்கதானே?