திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் மீராகுமார்
சென்னை: குடியரசுத்தலைவர் வேட்பாளர் மீராகுமார் திமுக தலைவர் கருணாநிதியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.
காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீராகுமார் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து, நேராக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு வந்த மீராகுமார் அங்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ அபுபக்கரையும் சந்தித்து ஆதரவு கோரினார்.
அதன்பின்னர் கோபாலபுரம் இல்லம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். அப்போது கருணாநிதியின் உடல் நலம் குறிதது மீராகுமார் விசாரித்தார். இந்த சந்திப்பின் போது ஸ்டாலின், கனிமொழி, திருநாவுக்கரசர், துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் அங்கிருந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார். அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இதன் பின்னர் அவர் இரவு டெல்லி புறப்படுகிறார்.