4 மணிநேரமாக எடப்பாடி, ஓபிஎஸ் வீடுகளில் நடந்த ஆலோசனை கூட்டம்! அடுத்து என்ன?
சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 4 மணி நேரத்திற்கும் மேலாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்கள் நிறைவடைந்தன.
அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதேபோன்று முதல்வர் பழனிசாமி, முக்கிய அமைச்சர்களுடன் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோருடன் தனது இல்லத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இணைப்பு திட்டம்
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இருதரப்பினரும் சந்தித்து, இரு அணிகளும் இணைய உள்ளது என தகவல் வெளியானது. 7.30 மணியளவில் இரு அணிகள் இணைப்பு நடைபெறுகிறது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தது.
முதல்வர் தொடர் ஆலோசனை
ஆனால், முதல்வர் தொடர்ந்து 3 முறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசித்தனர். இரவு சுமார் 9.15 மணியளவில் இரு இடங்களிலும் ஆலோசனைகள் நிறைவடைந்தது.
எதிர்ப்பு குரல்கள்
ஓபிஎஸ் தரப்பில் ஒரு சிலர், இப்போதைக்கு இணைப்பு வேண்டாம் என்றும், ஒரு சிலர் கூறியதால் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் பன்னீர்செல்வம் ஈடுபட்டதால்தான் முடிவை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தொண்டர்கள் குழப்பம்
இதனால் அதிமுக இணைப்பு விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதிமுக தொண்டர்கள் பல்வேறு நகரங்களிலும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்த தாமதம் நிகழ்ந்தது. இதுவரை எதற்காக இவ்விரு இடங்களிலும் ஆலோசனைகள் நடந்தன என்பது குறித்து அவ்விரு அணியினர் சார்பில் தெரிவிக்கவில்லை.