துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தான் ஆளுநரை சந்தித்தேன்.. ஜெயக்குமார் விளக்கம்
மீன்வளத்துறை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து ஆளுநரை சந்தித்தாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை: மீன்வளத்துறை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து ஆளுநரை சந்தித்தாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் தெளிவாக கூறினார்.
தமிழக அரசியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறிவரும் நிலையில் எம்பி தம்பிதுரையும், அமைச்சர் ஜெயக்குமாரும் அடுத்தடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.
இதனால் அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநர் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, நண்பர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாகதான் ஆளுநரை சந்தித்தேன் எனக்கூறினார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் ஆளுநரை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மீன்வளத்துறை பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக தான் ஆளுநரை சந்தித்ததாக அவர் கூறினார்.
அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும் ஓபிஎஸ் அணியுடன் பேசத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.