மண்ணுக்கு மரம் பாரமா.. மரத்துக்கு இலை பாரமா... பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
சென்னை: குழந்தைப் பேறு என்பது ஏதோ மிகப்பெரிய குற்றம் என்பது போல் காண்பித்து பெண்களுக்கு பெண்களையே எதிரிகளாகக் காட்டும் சீரியல்களின் போக்கு நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியது ஆகும்.
மண்ணுக்கு மரம் பாரமா... மரத்துக்கு இலை பாரமா... கிளைக்கு கனி பாரமா...பெற்றெடுத்த குழந்தை தாய்க்குப் பாரமா?' எனப் பிரபலமான பழைய திரைப்படப் பாடல் ஒன்று உள்ளது.
ஆனால், இன்றோ குழந்தைகள் பெற்றுக் கொள்வது தாய்க்கு பாரம் தான் என்பதையே திரும்பத்திரும்பச் சொல்கின்றன சீரியல்கள்.
திரும்பத் திரும்ப...
ஏற்கனவே கடந்த வாரம் சன் டிவியில் வரும் பிரியமானவளே சீரியலில், நாயகி அவந்திகா தனது கர்ப்பத்தைக் கலைக்க முயற்சிப்பது குறித்து நாம் கூறியிருந்தோம். ஆனால், சிலர் என்னதான் கழுவிக் கழுவி ஊற்றினால் தங்களது கடமையில் தவறாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆம், தொடர்ந்து அந்த சீரியலில் அதே போன்ற காட்சிகளே ஒளிபரப்பாகி வருகின்றன.
ஆட்டோவில் பயணம்...
தன்னால் இயன்ற வரை வீட்டில் இருந்தபடியே கர்ப்பத்தைக் கலைக்க எடுக்கும் அவந்திகாவின் முயற்சிகள் தோல்வியடைகின்றன. இதனால், தன் தோழியைத் தேடி ஆட்டோவில் பயணமாகிறாள்.
பதறிப் போகும் மாமியார்...
இடையே, மருமகளை ஆட்டோவில் பார்த்துப் பதறிப் போகும் மாமியார், தானே அவரை தோழி வீட்டிற்கு காரில் அழைத்துச் செல்கிறார். அங்கு மருமகளை விட்டுவிட்டு கிளம்புகிறார்.
தோழி...
மாமியார் கிளம்பியதும் தன் தோழியிடம் தன் கர்ப்பத்தை கலைக்க விரும்புவதாகக் கூறுகிறார் அவந்திகா. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அப்பெண்ணும் உடனடியாக தான் அதற்கு உதவுவதாகச் சொல்கிறார். தப்பித்தவறிக் கூட வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்' என அறிவுரை கூறவில்லை.
கடமையே கண்ணாக...
தூங்கிக் கொண்டிருக்கும் தன் சிறு மகனைக் கூட வேலைக்காரப்பெண்ணை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, தோழியுடன் மருத்துவமனை கிளம்புகிறார். அங்கே டாக்டர் பார்மாலிட்டிக்கு இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு, பின் கருவைக் கலைக்க மாத்திரைகள் கொடுக்கிறார்.
யூ டூ...
உயிரைக் காப்பாற்றும் புனிதமான மருத்துவத் தொழிலில் இருப்பவர் நாடகத்திற்காகவாவது அவந்திகாவிற்கு அறிவுரை கூறுவது போல் காட்சி அமைத்திருக்கலாம் (எபிசோடுக்கு 2 சீன் கூடக் கிடைச்சிருக்கும்ல..!). ஆனால், என்ன காரணம் என்றே கேட்காமல் காசுக்காக வேலை பார்ப்பது போல் உள்ளது அவரது கேரக்டர்.
இப்படித் தான் இருக்க வேணும்...
மாத்திரைகளுடன் வெளியே வரும் அவந்திகாவிற்கு மனதில் தான் தவறு செய்கிறோமோ என்ற தயக்கம் சிறிதாக எட்டிப் பார்க்கிறது. ஆனால், தோழியோ ஒரு குழந்தையை சுமப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை ஆணைப் போலவே, பெண்ணுக்கும் இருக்கிறது என தேவையில்லாமல் பெண்ணுரிமை பேசுகிறார் (ஆளுதான் குண்டாக இருக்கிறார் இவர்.. அறிவு ஒல்லியாகத்தான் இருக்கிறது).
தந்தையுமானவள்...
குடும்பத்தலைவரின் வேலை பணம் சம்பாதிப்பது, மனைவியின் வேலையோ வீட்டில் இருப்பவர்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளவேண்டியது என்ற வாழ்க்கைமுறை நம் பாட்டி காலத்திலேயே முடிந்து விட்டது. தற்போது இருவரும் சம்பாதித்தால் தான் குடும்பத்தை சமாளிக்க வேண்டிய நிலை பெரும்பாலானோர்களுக்கு. அதிலும் குறிப்பாக பெரு நகரங்களில் வசிப்போருக்கு.
மனதை கல்லாக்கி...
அப்படி இருக்கையில் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் குழந்தைகளை வீட்டில் பணிப்பெண்ணிடமோ அல்லது பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களிலோ விட்டுச் செல்லவேண்டிய கட்டாயம் இன்றைய பெண்களுக்கு. ஆண்களின் சம்பாத்தியம் வியர்வையால் ஆனது என்றால், பெண்களுடையது கண்ணீரால் கூடியது.
தவறான பிம்பம்...
பணத்தாசை பிடித்தவர்கள், குழந்தைகள் மீது பாசமில்லாதவர்கள் என்ற பிம்பம் இன்றைய குடும்பத்தலைவிகளின் மீது விழுவது தவிர்க்க இயலாதது. இதில், இத்தகைய சீரியல்கள் பெண்களை இன்னும் பாசமற்றவர்களாக, இரக்கமற்றவர்களாகக் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
என்னா ஒரு வில்லத்தனம்...
அதிலும், கர்ப்பத்தைக் கலைக்க அப்பெண்ணுக்கு உதவுபவர்கள் அனைவருமே பெண்கள். பெண்களுக்கு எதிரியாக பெண்களையே காட்டும் இயக்குநரின் சாமர்த்தியத்தை என்னவென்று சொல்வது.
இருகோடுகள் தத்துவம்...
இத்தகைய சீரியல்களைப் பெரிதும் விரும்பிப் பார்ப்பது பெண்கள் தான். தன்னை விட கொடுமை அனுபவிக்கும் பெண்களைப் பார்த்து, இருகோடுகள் தத்துவத்தில் ஆறுதல் பட்டுக் கொள்ளும் பெண்கள், இத்தகைய காட்சிகளை ஊக்குவிக்கக் கூடாது.
கல்யாணமா... ஐயய்யோ
போகிற போக்கைப் பார்த்தால் திருமணம் செய்து கொண்டால்கூட தொல்லை தான். பேசாமல் பேச்சுலராகவே இருந்து விட்டால் நல்லது என இனி வரும் சீரியல்களில் காட்சிகளை எதிர்பார்க்கலாம் போல.
மாற வேண்டிய நேரம்...
ஏற்கனவே, கூட்டுக்குடும்பம் சுருங்கி தனிக்குடும்பங்கள் அதிகரித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் குடும்பங்களையும் குறைக்கும் நல்ல காரியத்தை செய்யும் பணியில் சீரியல்கள் இறங்கியுள்ளன. மக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய, டிவி சேனலை மாற்ற வேண்டிய நேரம் இது... கூடவே அவந்திகாவும் மாற வேண்டும் பாஸ்!