திருப்பூரில் பிடிபட்டவன் மேகாலயாவின் "மோஸ்ட் வான்டட்" தீவிரவாதி!
திருப்பூர்: திருப்பூரில் சிக்கிய மேகாலயா போராளி, அந்த மாநில போலீஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த மிக முக்கியமான தீவிரவாதி என்று தெரிய வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சின்னக்கரையில் உள்ள பனியன் நிறுவனத்தில், மேகாலயா தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சாக்கோ தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்தின் பேரில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த, வட கிழக்கு மாநிலத் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, மேகாலயா மாநிலம், மென்டிபதர் போலீஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய போராளிக் குழுத் தலைவர் வில்லியம் ஏ.சங்மா (27) அங்கு பணியாற்றி வருவது கண்டறியப்பட்டது. இவர் கோல்பரா மாவட்டம், பக்ரபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அதேபோன்று மேகாலயா மாநிலம், தெற்கு கரோஹில்ஸ் சோக்பாட் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள டாகல்கர் கிராமத்தைச் சேர்ந்த அலாஸ் ஆர்.சங்மா (32) என்கிற மற்றொரு போராளிக் குழுவைச் சேர்ந்தவரும் இங்கு பணிபுரிவது கண்டறியப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்து, திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1-ல் ஆஜர்படுத்தி மேகலாயா அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட வில்லியம் ஏ சங்மா அசிக் தேசிய கூட்டுறவு ராணுவம் என்ற தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர். அதன் தலைவரும் ஆவார். இவரை அசாம் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த 3 மாதமாக மேகாலயா போலீஸார் இவரைத் தேடி வந்தனர்.
அவருடன் கைது செய்யப்பட்ட அலாஸ் ஆர். சங்மா, தனது 6 வயது மகனைக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார். தற்போது இருவரையும் போலீஸார் மேகாலயாவின் காரோ ஹில்ஸ் பகுதிக்குக் கொண்டு வந்துள்ளனர்.
முன்னதாக வில்லியமின் கூட்டாளயான சஞ்சீவ் ராய் என்பவரை துரா பகுதியில் உள்ள லோயர் பாபுபாரா என்ற இடத்தில் வைத்து அசாம் போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 செல்போன்கள், சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.