ரேஷன் அட்டையில் குடும்பத்தலைவராக 'தலைவிகள்'.. ஆண்கள் போர்க்கொடி.. இது ஸ்மார்ட் கார்டு கலாட்டா
சேலத்தில் ரேஷன் அட்டையில் குடும்பத்தலைவராக மனைவி பெயர்கள் பதிவானதற்கு கணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஆட்டுக்காரனூரில் கணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது ஒப்புதல் இல்லாமல் மனைவி பெயர்களை குடும்பத்தலைவர்களாக பதிவிட்டதாக புகார் அளித்துள்ளனர்.
ஓமலூர் தாலுகா, பச்சனம்பட்டி, ஆட்டுக்காரனூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கடை எண், 64ல், 475 குடும்ப அட்டைகள் மூலம் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அந்தக் கடையில் உள்ள கார்டுகளில், 80 சதவீதம் கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கார்டுகளை வாங்கிப்பார்த்த குடும்ப தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் அவர்களுக்குத் தெரியாமலேயே 'தலைவர்களின்' படங்களுக்கு பதில், 'தலைவிகளின்' படம் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளதுதான்.
இதனால், அதிருப்தி அடைந்த குடும்ப தலைவர்கள், பத்துக்கும் மேற்பட்டோர், பழைய ரேஷன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளை எடுத்துக்கொண்டு, அந்த ரேஷன் கடையை முற்றுகை போராட்டம் நடத்தி கொந்தளித்துள்ளனர்.
தொடர்ந்து, மனைவி படம் அச்சிட்டது குறித்து, ரேஷன் கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர். விற்பனையாளர், ஓமலூர் வட்ட வழங்கல் அலுவலர் அருள் இது மத்திய அரசு கொண்டு வந்த புதிய உத்தரவு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று , மொபைல் மூலம் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, தலைவர்கள் வேறு வழியின்றி புலம்பியவாறே கலைந்து சென்றனர்.