டிக்கெட் வாங்கினா உடனே ரயில் ஏறுங்க.. குடிகாரர்களுக்கு இடமில்லை: மெட்ரோ நிர்வாகம் ஆர்டர்
சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்கள் சுற்றுலா தலங்கள் போல மாறி வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்க மெட்ரோ நிர்வாகம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் 20 நிமிஷங்களுக்கு மேல் பயணம் மேற்கொள்ளாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை 7 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்கள் உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. குளுகுளு வசதியுடன் கூட ரயில்களில் பயணிக்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுற்றுலா தலங்கள்
சிலர் ரயில் நிலையங்களில் மணிக்கணக்கில் கூட சுற்றி வருகின்றனர். ஒருமுறை டிக்கெட் எடுத்து அதே டிக்கெட் மூலம் ரயில்களில் சுற்றி சுற்றி வருகின்றனர். இதனால் தேவையற்ற கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் புரிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
20 நிமிடத்திற்கு மேல்
ஓர் ரயில் நிலையத்தில் பயணத்துக்காக பெறப்படும் பயணச் சீட்டைக் கொண்டு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து ரயில் நிலையத்தில் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதன்படி சீட்டு பெற்ற ரயில் நிலையத்திலேயே 20 நிமிஷங்களுக்கு மேலும் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.
ஒரு மணிநேரம்தான்
அதேபோல, ஓர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும். பயண நேரம் அதற்கு மேல் ஆனாலும் அபராதம் விதிக்கப்படும்.
அபராதம் என்ன?
மெட்ரோ ரயில் நிலையத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் மெட்ரோ ரயில் சொத்துகளில் போஸ்டர், எழுதுவது, வரைவது ஆகியவற்றுக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும்.
குடிகாரர்களுக்கு தண்டனை
மது அருந்திவிட்டு பயணம் செய்பவர்கள், பயணிகளுக்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு ரூ.500 அபராதம், பயணத்தில் இருந்து பாதியில் இறக்கி விடப்படுவர்.
சிறை தண்டனை
மெட்ரோ ரயில் சொத்துகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான பொருள்களை எடுத்துச் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான பொருள்களை (பட்டாசு, வெடிபொருள்கள்) கொண்டு செல்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
கூரை மீது ஏறினால்
மெட்ரோ ரயில் கூரை மீது பயணம் மேற்கொள்ள முயன்றால் 1 மாதம் சிறை தண்டனையும், ரூ.50 அபராதமும் விதிக்கப்படும்.
பயணச் சீட்டு இல்லாமல் அத்துமீறி ரயில் நிலையத்துக்குள் நுழைபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.250 அபராதம் விதிக்கப்படும்.
ஓடும் ரயிலை நிறுத்தினால்
மெட்ரோ ரயில் தண்டவாளங்களில் நடந்தால் 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும். ஓடும் ரயிலை தடுத்து நிறுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும்.
தொலை தொடர்பு சாதனங்கள்
மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு பணியின்போது தொல்லை கொடுத்தால் 1 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். பாஸ் அல்லது பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தால் ரூ. 50ம், பயணத்துக்கான பயணக் கட்டணமும் சேர்த்து அபராதம் விதிக்கப்படும். ரயிலில் உள்ள தொலைத் தொடர்பு சாதனங்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தினாலோ, அவசர கால பொத்தானை தவறாக பயன்படுத்தினாலோ 1 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
போலி டிக்கெட்டுக்கு
போலி பயணச் சீட்டை உருவாக்கினால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். உணவுப் பொருள்களை அத்துமீறி விற்பனை செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
சக பயணிகளை தாக்கினால்
ரயிலை விபத்துக்குள்ளாக்குவது, கொலை முயற்சி, சக பயணிகளை தாக்கிய குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை (சட்ட விதிகளுக்கு உள்பட்டு) விதிக்கப்படும். மெட்ரோ ரயில் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். பொய்யான புகார்கள், பொய்யான நிவாரணம் கோருபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படும்.