கர்நாடகத்தின் அக்கிரமத்தால் கூவமாக மாறி வருகிறது மேட்டூர் அணை.. ராமதாஸ் கவலை
புதுக்கோட்டை: காவிரி ஆற்றில் மீண்டும் கழிவு நீரைத் திறந்து விட ஆரம்பித்துள்ளது கர்நாடக அரசு. இதைத் தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. இந்த கழிவு நீரால் மேட்டூர் அணையில் மீன்கள், பாம்புகள், பறவைகள் செத்து மிதக்கின்றன. இப்படியே போனால் விரைவிலேயே கூவமாக மாறி விடும் மேட்டூர் அணை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது ராமதாஸ் கூறியதாவது:
காவிரியில் மீண்டும் கழிவு நீர் திறந்து விடுவதை கர்நாடகா அரசு தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் மீன்கள் செத்து மிதந்தன. துர்நாற்றமும் வீசுகிறது.
எனவே மத்திய, தமிழக அரசுகள் கர்நாடக அரசு கழிவு நீரை திறந்து விடாமல் தடுக்க வேண்டும். இல்லையென்றால் மேட்டூர் அணை மற்றொரு கூவமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. கங்கை ஆற்றை தூய்மைபடுத்துவதற்கு ஆணையம் அமைத்துள்ளது போன்று காவிரி ஆற்றை தூய்மை படுத்துவதற்கு ஆணையம் அமைக்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் சேதங்களையும் மத்தியக்குழு பார்வையிடவில்லை. தமிழக அரசு அதிகாரிகள் காட்டக்கூடிய இடங்களை மட்டும் மத்திய குழு ஆய்வு செய்வதால் எந்த பலனும் இல்லை. உண்மையான நிலவரத்தை மத்தியக்குழு பார்வையிட செய்து, கூடுதல் நிதி பெற வேண்டும் என்றார் ராமதாஸ்.