மேட்டூர் அணை ஆகஸ்ட் 9ல் திறப்பு: தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஜெ. வலியுறுத்தல்
மேட்டூர்: காவிரி டெல்டா மாவட்ட பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 9ம் தேதி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் குறைந்த பட்சம் 90 அடியாக இருக்கும் போது குறுவை நெல் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூலை 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் நீர்மட்டம் 74.21 அணி தண்ணீர் மட்டுமே இருந்தது. எனவே அணையில் இருந்து தண்ணீர் திறக்க இயலவில்லை.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால், கடந்த 26ம் தேதி அணையின் நீர்மட்டம் 93.95 அடியாக உயர்ந்தது. ஆடிப்பெருக்கு விழாவிற்காக அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் திறப்பை விட வரத்து கூடுதலாக இருப்பதால் செவ்வாய்கிழமையன்று 94.81 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 95.26 அடியாக அதிகரித்தது. இப்போது, அணைக்கு வினாடிக்கு 12,621 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது அணையின் நீர் இருப்பு 58.87 டிஎம்சியாக உள்ளது.
தற்போது உள்ள நீர் இருப்பைக் கருத்தில் கொண்டும், காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி உரிய பங்கு கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டும் ஆகஸ்ட் 9ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளேன்.
இதன் மூலம் சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பாசன சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறவேண்டும் என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.