கனமழையால் வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை... 50 அடியை எட்டிய நீர்மட்டம்
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரில் அளவு அதிகரித்து கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஒகேனக்கல் அருவிகளில் வெள்ள நீர் கொட்டுகிறது. பொங்கி வரும் புதுப்புனலாய் காட்சி அளிக்கிறது ஒகேனக்கல் அருவி.
அருவிகளில் வெள்ளம்
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிரித்ததால் அங்கிருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. ஒகேனக்கல் அருவியில் கொட்டும் நீரினால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர் வரத்து அதிகரிப்பு
தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 21,947 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 18.330 டிஎம்சியாக உள்ளது. வினாடிக்கு 1300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
50 அடியாக உயர்வு
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 51 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வறட்சி காரணமாக குறைந்துகொண்டே வந்தது. தற்போது தொடர்மழையால் பத்து மாதங்களுக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது.
டெல்டா பாசனத்திற்கு தண்ணீர்
120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டினால் மட்டுமே காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.