எம்ஜிஆர் விஜயன் கொலை வழக்கு - சுதாவின் சகோதரி பானு விடுதலை... 5 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி!
எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் பானு உள்ளிட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பானு உள்ளிட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறைந்த எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் தம்பி நாராயணன். இவருக்கு 6 மகள்கள், ஒரு மகன். இதில் சுதா உள்ளிட்டோரை எம்ஜிஆர் தத்தெடுத்து வளர்த்தார். சுதாவின் கணவர் தான் விஜயன் என்ற விஜயகுமார், எம்ஜிஆர் அறக்கட்டளை நடத்தி வந்த இவர் தனது குடும்பத்துடன் ராமாவரம் தோட்டத்தில் வசித்து வந்தார்.
நாராயணனின் மற்றொரு மகள் பானு. இவருக்கு குமார் என்ற மகன் உள்ளார். இவர்களும் எம்.ஜி.ஆர். அறக்கட்டளைக்குச் சொந்தமான நிறுவனங்களை நிர்வகித்து வந்தனர். சொத்துக்கள் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
விஜயன் கொலை
இந்த நிலையில் விஜயன் கடந்த 2008 ஜூன் 4ஆம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்த விஜயனை, ஒரு கும்பல் வழிமறித்து இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தது. அபிராமபுரம் போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப் பட்டது.
சிபிசிஐடி விசாரணை
சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில், விஜயனைக் கொலை செய்தது சுதாவின் தங்கைகளில் ஒருவரான பானு என்பதும், அவர் போலீஸ்காரரான கருணா என்பவரின் உதவியுடன் கூலிப்படையினர் மூலமாக விஜயனை தீர்த்துக்கட்டியதும் அம்பலமானது. எம்ஜிஆர் நிறுவிய ஒரு பள்ளிக்கு நிர்வாகியாக விஜயன் இருந்துள்ளார் என்றும், இந்த பள்ளிக்கூடத்தை தனது பெயரில் எழுதி வைக்க பானு விடுத்த கோரிக்கையை விஜயன் ஏற்க மறுத்ததாலேயே இந்தக் கொலை நடந்துள்ளது என்பதையும் போலீஸார் விசாரணையில் ஊர்ஜிதப்படுத்தினர்.
பானு உட்பட 8 பேர் மீது வழக்கு
இதையடுத்து, இந்த வழக்கில் பானு முதல் குற்றவாளியாகவும், பானுவிற்கு உதவிய போலீஸ்காரர் கருணா 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். தவிர விஜயனைக் கொலை செய்த சுரேஷ், ஆர்.கார்த்திக், தினேஷ்குமார், சாலமன், எம்.கார்த்திக், பள்ளி ஆசிரியை புவனா உள்ளிட்ட 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
7 பேருக்கு ஆயுள் தண்டனை
இதில் ஆசிரியை புவனா வெளி நாட்டிற்கு தப்பியதால், அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, எஞ்சிய 7 பேர் மீதான வழக்கு மட்டும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பானு விடுதலை
பானு உட்பட 7 பேரும் ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் பானு, கார்த்திக் 2 பேர் விடுதலை செய்ய்யப்பட்டனர். மேலும் 5 பேருக்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக விஜயனின் மனைவி சுதா கூறியுள்ளார்.