10,000 டன் பால் பவுடர் தேக்கம்- சத்துணவு கூடங்களில் குழந்தைகளுக்கு வழங்க "ஆவின்" கோரிக்கை!
சேலம்: ஆவின் நிறுவனத்தில் பத்தாயிரம் டன் பால் பவுடர் தேக்க நிலையில் இருப்பதால் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அவற்றை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர் அதன் நிர்வாகிகள்.
சேலத்தை தலமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் செங்கோட்டுவேல், பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்துக்கு பின் இருவரும் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் பால் உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. நிலம் உள்ள விவசாயிகளை விட, நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்கள், அதிக அளவில் பால் உற்பத்தி செய்து வருகின்றனர்.
வாங்க மறுக்கும் நிறுவனங்கள்:
தமிழகத்தில் உற்பத்தியாகும் முழு பாலையும், ஆவின் நிறுவனமும், தனியார் நிறுவனங்களும் வாங்க மறுக்கின்றன. பால் கொள்முதல் அளவை கட்டுப்படுத்த, ஒரு சில மாவட்டங்களில் உள்ள ஆவின் ஒன்றியங்களில், பால் கொள்முதலில், மாதம் இரு நாட்கள் விடுமுறை அளிப்பது, கோட்டா முறையை அமல் படுத்துவதுமான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
மூடிக் கொண்டே இருக்கின்றன:
தனியார் பால் நிறுவனங்களும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பால் வாங்கும் சென்டர்களை மூடிகொண்டே உள்ளது. ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள், பால் வாங்காத நிலையில், விவசாயிகள் உற்பத்தி செய்த பாலை, வீதி, வீதியாக எடுத்துச் சென்று மிக குறைந்த விலைக்கு விற்கும் அவலம் நடந்து வருகிறது.
பொருளாதார இழப்பு அதிகம்:
விவசாய தோட்டங்களுக்கு சென்று நேரடியாக பால் கறக்கும் பால் வியாபாரிகள், ஒரு லிட்டருக்கு, 15 ரூபாய் முதல், 17 ரூபாய் வரையிலும், தனியார் நிறுவனங்கள், ஒரு லிட்டருக்கு, 19 ரூபாய் முதல், 22 ரூபாய் வரையிலும் என குறைந்த விலைக்கு பால் கொள்முதல் செய்கிறார்கள். இதனால், பால் உற்பத்தியாளர்கள் பொருளாதார இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் மாடுகளை அறுப்புக்காகவும், கறவைக்காக வெளிமாநில வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர்.
பால்வளம் சீரழிவு:
இந்நிலை நீடிக்குமாயின் தமிழகத்தின் பால்வளம் சீரழியும். இன்றைய நிலையில், தமிழகத்தில் உள்ள ஆவின் மாவட்ட ஒன்றியங்களில், 10,000 டன் பால் பவுடர் தேக்கம் அடைந்துள்ளது. இதனால், பால் உற்பத்தியாளர்களுக்கு, நிலுவை இல்லாமல் பால் பணம் பட்டுவாடா செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிக நாளுக்கு பால் பவுடர்களை வைத்திருக்க முடியாது.
அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு பால்:
இதை சரி செய்யவேண்டுமானால், அரசு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலை சத்துணவு, அங்கன்வாடி குழந்தைகளுக்கு முட்டைக்கு மாற்றாக பால் வழங்க வேண்டும். இப்டி செய்யும் போது, தமிழகத்தில், 50 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர். ஆவின் பால் கொள்முதல், 30 லட்சம் லிட்டர் என்பது, 50 லட்சம் லிட்டராக உயர்வதோடு, அரசின் திட்டமிடலின்படி, தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, ஆவின் பால் கொள்முதல் அளவை, ஒரு கோடி லிட்டராக அதிகரிக்க முடியும்.
சத்துமிக்க உணவு:
பால்வளத்துறை மானியக் கோரிக்கையின் போது, மதிய உணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பால் வழங்க உத்தரவு பிறப்பிக்க, தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். தற்போது வாரத்துக்கு, ஐந்து நாள் வழங்கப்படும் முட்டையை விட, பால் அதிக சத்துமிக்கது . முட்டைக்கு ஆகும் செலவைவிட பால் வழங்குவதற்கு செலவு குறைவாகவே இருக்கும். அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு தபால் கார்டு போடும் போராட்டம் நடத்தப்படும்" என கூறினர்.