அக்டோபர் 6 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு
சென்னை: தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் கொள்முதல் விலை அதிகரித்திருப்பதால் பால் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. அதே நேரம் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், புதிய விலை உயர்வுக்கு பால் முகர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் பால் சார்ந்த உணவுப் பொருள்களின் விலையும் உயரும் என்பதால் பழைய விலைக்கே வழங்க தமிழ்நாடு பால்முகவர்கள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஒரே ஆண்டில் 4வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை நள்ளிரவு முதல் பால் விலை உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அக்டோபர் 6ம்தேதி முதல் பொதுமக்களுக்கு அதன் பாதிப்பு தெரியவரும். அரசின் ஆவின் பாலில் கலப்படம் செய்ததாக ஆளும்கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மக்கள் தனியார் பால்கள் மீது விருப்பத்தை திருப்ப ஆரம்பித்தனர். இந்நிலையில் விலையேற்றம் அவர்களுக்கு சுமையாக மாறியுள்ளது.