உங்க வேலையை நீங்க பாருங்க.. செய்தியாளர்களுக்கு ரஜினி "அட்வைஸ்"!
என் வேலையை நான் பார்க்கிறேன். உங்க வேலையை நீங்க பாருங்க என்று நடிகர் ரஜினி காந்த் தெரிவித்தார்.
சென்னை: உங்க வேலையை நீங்க பாருங்க, என் வேலையை நான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு மும்பை புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினி காந்த்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த வாரம் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான அரசியல் தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் போர் வரும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
இதிலிருந்து அவரது அரசியல் பிரவேசம் உறுதியானது. இந்நிலையில் தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்றும் அரசியலில் ஈடுபடலாம், ஆனால் தமிழகத்தை ஆள கூடாது என்றும் பல்வேறு கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கருத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரஜினி வரும் ஜூலை மாதம் தனிக்கட்சி தொடங்குவார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் அறிவித்திருந்த நிலையில் அவர் பல்டி அடித்தார். இதனிடையே ரஜினி காந்த் இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் தகவல் காட்டுத் தீ போல பரப்பப்பட்டதால் எங்கே அவர் கட்சி தொடங்கப் போகும் செய்தியை வெளியிடப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால் அப்படியெல்லாம் எந்த சந்திப்புக்கும் திட்டம் இல்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் நாளை மும்பையில் ரஜினி நடக்கும் காலா படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள மும்பை புறப்பட போயஸ் கார்டன் வீட்டிலிருந்து புறப்பட்ட ரஜினியிடம் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் என் வேலையை நான் பார்க்கிறேன். உங்க வேலையை நீங்க பாருங்க என்று சிரித்தபடியே சொல்லி விட்டு சென்றார். அரசியல் குறித்து வேறு எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.