சேகர் ரெட்டியோடு கூட்டு வைத்து ஊழல் செய்தவர் ஓபிஎஸ்... போட்டுத் தாக்கும் சி.வி.சண்முகம்!
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதே ஊழல் செய்தவர் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : முதல்வர் பழனிசாமி அரசின் மீது ஊழல் புகார் சொல்ல ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகுதியில்லை என்று அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார். முதல்வராக இருந்த போது ஓபிஎஸ் ஊழல் செய்தவர் என்றும் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டதற்கு இலாகா பூர்வமாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். தமிழகத்தில் இன்று நடைபெறும் ஆட்சி ஊழல் ஆட்சி இது அதிமுகவிற்கு செய்யும் துரோகம் என்றும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
என்ன தகுதி
ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஊழல் புகார் கூற ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டார்.
ஓபிஎஸ் ஊழல்
ஓ.பிஎஸ் முதல்வராக இருந்த போது ஊழல் செய்தவர், மணல் மாஃபியா சேகர் ரெட்டியோடு கூட்டணி வைத்திருந்தவர் என்று காட்டமாகச் சொன்னார். மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஊழல் செய்தவர் ஓபிஎஸ் என்றும் அமைச்சர் சண்முகம் குற்றம் சாட்டினார்.
தகுதியில்லை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார். அவரது ஆட்சி மீது குற்றம்சாட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த தகுதியும் இல்லை என்று அமைச்சர் சண்முகம் மீண்டும் தெரிவித்தார்.
அணிகள் இணைவதில் சிக்கல்
அதிமுகவின் இரு அணிகள் இணைவது போல நேற்று அரசியல் காட்சிகள் அரங்கேறின. ஆனால் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக இரண்ட அணியும் மீண்டும் ஆளாளுக்கு வார்த்தைகளில் வருத்தெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் இரு அணிகள் இணையாது என்பது போன்ற தோற்றமே தற்போது தெரிகிறது.